கொல்கத்தா : டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப் பெரிய இலக்கை சேஸிங் செய்து மாபெரும் வெற்றியை பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 261 ரன்கள் குவித்தது. டி20 கிரிக்கெட்டில் 260 ரன்களுக்கு மேல் உள்ள இலக்கை எந்த அணியும் சேஸிங் செய்து வெற்றி பெற்றதில்லை என்ற நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி சேஸிங் செய்தது.
கொல்கத்தா அணியில் பில் சால்ட் 75, சுனில் நரைன் 71, ஆண்ட்ரே ரஸ்ஸல் 24, வெங்கடேஷ் 39, ஸ்ரேயாஸ் 28 ரன்கள் குவித்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 261 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த பஞ்சாப் அணி தடுமாறி விக்கெட்களை இழந்து தோல்வி அடையப் போகிறது என்றே பலரும் நினைத்த நிலையில் யாரும் நினைத்துப் பார்க்காத துவக்கம் அளித்தார் பிரப்சிம்ரன் சிங்.

அவர் 18 பந்துகளில் அரைசதம் அடித்து கொல்கத்தா அணியை நிலைகுலைய வைத்தார். அவர் 20 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரூசோ 16 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். மறுபுறம் மற்றொரு துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ மரண அடி அடித்து கொல்கத்தா அணியை சிதற வைத்தார்.
நான்காம் வரிசையில் களமிறங்கிய ஷஷான்க் சிங் அடித்தால் சிக்ஸ் என்ற மனநிலையில் ஆடினார். சுனில் நரைன் ஓவர்களில் மட்டும் நல்ல பிள்ளையாக ரன் குவிக்காமல் தவிர்த்த ஷஷான்க் சிங் கொல்கத்தா அணியின் மற்ற பந்துவீச்சாளர்களில் சிக்ஸர் மழை பொழிந்தார். பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் கடந்தார். 48 பந்துகளில் 108 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 8 ஃபோர் மற்றும் 9 சிக்ஸ் அடித்து இருந்தார். ஷஷான்க் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்து இருந்தார். அவர் 2 ஃபோர் மற்றும் 8 சிக்ஸ் அடித்து இருந்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 262 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 கிரிக்கெட்டில் மாபெரும் வெற்றியை பெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.