கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் பஞ்சாப் அணியில் இருந்து ஸ்டாய்னிஸ் மற்றும் பார்ட்லெட் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மேக்ஸ்வெல் மற்றும் ஓமர்சாய் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் கேகேஆர் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 44வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து கேகேஆர் அணி களமிறங்கியுள்ளது. இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு முக்கியமான போட்டி என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த போட்டியில் பஞ்சாப் அணி 112 ரன்கள் குவித்த போது, கேகேஆர் அணியை 95 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து அபார வெற்றியை பெற்றது.

இதற்கு கேகேஆர் அணி சொந்த மண்ணில் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த முறை கேகேஆர் அணிக்கு தலைமை தாங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஆக்ரோஷமாக செயல்படுவாரா என்ற கேள்வியும் உள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், நாங்கள் பேட்டிங்கை தேர்வு செய்கிறோம். கடந்த போட்டியில் விளையாடிய அதே பிட்சில் தான் ஆட்டம் நடக்கிறது. அதனால் முதல் பேட்டிங் செய்கிறோம். மீண்டும் கொல்கத்தா ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. பஞ்சாப் அணிக்கு இந்த சீசனில் சிறந்த தொடக்கம் கிடைத்து வருகிறது.
ஆனால் சில சூழல்களில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். எங்களின் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று கருதுகிறேன். அதேபோல் பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்த வேண்டும். பவர் பிளேவில் எவ்வளவு அதிகமாக விக்கெட்டுகளை வீழ்த்துகிறோமோ, அவ்வளவு நல்லது. மேக்ஸ்வெல் மற்றும் ஓமர்சாய் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து ரஹானே பேசுகையில், சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும். என்ன இலக்காக இருந்தாலும், சேஸிங் செய்ய வேண்டும். எங்களின் பவுலர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஒவ்வொரு போட்டிக்கும் முன்னேற்றம் அடைகிறார்கள். பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் ஏமாற்றத்துடன் இருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் இன்னும் தைரியமாக விளையாட வேண்டும்.
இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயம் உள்ளது. எதிர்வரும் போட்டிகள் பற்றிய சிந்தனை எங்களிடம் கிடையாது. பாசிட்டிவ் மனநிலையுடன் விளையாடுகிறோம். மொயின் அலிக்கு பதிலாக பவல் மற்றும் ரமன்தீப்-க்கு பதிலாக சக்காரியா சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.