கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இரண்டு சர்வதேச வேகப் பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து அதிர்ச்சி அளித்தனர். இருவரும் 50 ரன்களுக்கும் அதிகமாக ரன்களை வாரி இறைத்து கத்துக் குட்டி பந்துவீச்சாளர்கள் போல காட்சி அளித்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் சுனில் நரைன் 32 பந்துகளில் 71 ரன்களும், பில் சால்ட் 37 பந்துகளில் 75 ரன்களும் குவித்தனர். அடுத்து வெங்கடேஷ் 23 பந்துகளில் 39 ரன்கள், ஆண்ட்ரே ரஸ்ஸல் 12 பந்துகளில் 24 ரன்கள் குவித்தனர். கடைசி நேரத்தில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 10 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார்.

இதை அடுத்து கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 261 ரன்கள் கொடுத்தது. பஞ்சாப் அணியில் இடம் பெற்று இருந்த இங்கிலாந்து அணியின் சாம் கர்ரன் மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா ஆகிய இருவரும் 50 ரன்களுக்கும் அதிகமாக வாரி இறைத்து இருந்தனர்.
சாம் கர்ரன் 4 ஓவர்களில் 60 ரன்கள் கொடுத்து இருந்தார். ரபாடா 3 ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்து சொதப்பி இருந்தார். 2024 ஐபிஎல் தொடரில் 200 ரன்களுக்கும் மேல் அடிப்பது சர்வ சாதாரணம் ஆகி விட்டது. ஆனாலும் கூட சர்வதேச அனுபவம் கொண்ட பந்துவீச்சாளர்கள் பலர் சிறப்பாகவே பந்து வீசி வருகிறார்கள். அந்த வகையில் அடுத்து டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள சாம் கர்ரன் மற்றும் காகிசோ ரபாடா மோசமான பந்துவீச்சை பதிவு செய்தனர்.
ஐபிஎல் தொடரில் அதிக முறை ஒரே போட்டியில் 50 ரன்களுக்கும் அதிகமாக கொடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சாம் கர்ரன் மற்றும் காகிசோ ரபாடா இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் இந்தப் போட்டியை சேர்த்து மொத்தம் ஆறு முறை ஒரே போட்டியில் 50 ரன்களுக்கும் அதிகமாக ரன்களை கொடுத்து இருக்கின்றனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்த போதும் பேட்டிங் அபாரமாக இருந்தது. கொல்கத்தா நிர்ணயித்த 262 ரன்கள் இலக்கை எட்டி பஞ்சாப் கிங்ஸ் அணி வரலாறு படைத்தது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய இலக்கை சேஸிங் செய்த அணி என்ற பெருமையை பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஜானி பேர்ஸ்டோ 108, பிரப்சிம்ரன் சிங் 54, ஷஷான்க் சிங் 68 ரன்கள் குவித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர்.