கொல்கத்தா: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய சூர்யவன்ஷி, 2வது பந்தில் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் தூக்கியடிக்க, அதனை கிட்டத்தட்ட 20 மீட்டர் தூரம் ஓடிச் சென்று ரஹானே கேட்ச் பிடித்து அசத்தினார்.
ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து கேகேஆர் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதல் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரஸ்ஸல் 22 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இதன்பின் ராஜஸ்தான் அணி தரப்பில் சூர்யவன்ஷி - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

கேகேஆர் அணி தரப்பில் வைபவ் அரோரா முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் 2வது பந்தில் ஒரு ரன் எடுத்துவிட்டு ஜெய்ஸ்வால் மறுபக்கம் சென்றார். இதன்பின் வைபவ் சூர்யவன்ஷி எதிர்கொண்ட முதல் பந்திலேயே கவர்ஸ் திசையில் பவுண்டரியை விளாசினார். இதனைத் தொடர்ந்து வைபவ் அரோரா அடுத்த பந்திலேயே கொஞ்சம் கூடுதல் வேகத்துடன் ஷார்ட் பாலை வீசினார்.
அதனை சிக்ஸ் அடிக்க வேண்டும் என்ற முயற்சியில் தூக்கியடிக்க, அது மிட் விக்கெட் திசையை நோக்கி உயரப் பறந்தது. இதனைப் பார்த்த ரஹானே, விரைவாக பின்னாடி ஓடி சென்று கடைசி வரை பந்தில் இருந்து கண்ணை எடுக்காமல் அற்புதமான கேட்சை பிடித்து அசத்தினார். இதனால் வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, அடுத்த 2 போட்டிகளிலும் 0 மற்றும் 4 ஆகிய ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இந்த இன்னிங்ஸில் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்திய பின், கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
இதன் மூலமாக ஒவ்வொரு அணிகளும் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்துவதற்கான திட்டத்துடன் களமிறங்குவது தெரிய வந்துள்ளது. இதனால் வரும் போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி அட்டாக் மனநிலையுடன் களமிறங்காமல், கொஞ்சம் பவுலர்களை பார்த்து அட்டாக் செய்ய வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.