கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது. இதன்பின் 207 ரன்கள் என்ற மெகா இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
இதில் முதல் ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, மொயின் அலி வீசிய 2வது ஓவரிலேயே கேஎஸ் ரத்தோர் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் ஜெய்ஸ்வால் - ரியான் பராக் கூட்டணி இணைந்து அதிரடியாக விளையாடினர். இருவரும் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ள, 5வது ஓவரிலேயே வருண் சக்கரவர்த்தி அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்,

ஆனால் அந்த ஓவரிலும் கூட 2 பவுண்டரிகள் விளாசப்பட, ராஜஸ்தான் அணி 6 ஓவர்கள் முடிவில் 59 ரன்களை எடுத்திருந்தது. இந்த நிலையில் மொயின் அலி பவுலிங்கில் அட்டாக் செய்ய முயன்று ஜெய்ஸ்வால் 34 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த துருவ் ஜுரெல் மற்றும் ஹசரங்கா இருவரும் வருண் சக்கரவர்த்தி பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினர்.
இதனால் கண்மூடி திறப்பதற்குள் ராஜஸ்தான் அணி 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ஹெட்மயர் - ரியான் பராக் கூட்டணி இணைந்தது. அடுத்த சில ஓவர்களுக்கு இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், 12 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. இந்த நிலையில் 13வது ஓவரை வீசிய மொயின் அலி பவுலிங்கில் ரியான் பராக் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்கவிட்டார்.
தொடர்ந்து வருண் சக்கரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் ரியான் பராக் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க, தொடர்ச்சியாக 6 சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இதன் காரணமாக ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 52 ரன்கள் தேவையாக இருந்தது. இதன்பின் ஹெட்மயர் 29 பந்துகளில் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இன்னொரு பக்கம் சதத்தை நெருங்கிய ரியான் பராக் 45 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 33 ரன்கள் தேவையாக இருந்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் சுபம் துபே - ஆர்ச்சர் கூட்டணி களத்தில் இருந்தது. இந்த நிலையில் ரஸ்ஸல் வீசிய 19வது ஓவரில் 11 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவையாக இருந்தது.
அந்த ஓவரை வீச வைபவ் அரோரா அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 2, 1, 6, 4, 6 என்று 5 பந்துகளில் 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவையாக இருந்தது. அந்த பந்தில் 2வது ரன் ஓடும் போதே ஆர்ச்சர் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் கேகேஆர் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.