கொல்கத்தா : கொல்கத்தா மைதானத்தின் விஐபி அறைக்குள் நின்று கொண்டு நடிகரும், கேகேஆர் அணியின் உரிமையாளருமான ஷாரூக் கான் சிகரெட் புகைத்த வீடியோ வெளியாகி ரசிகர்ளிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. அதிரடி வீரர் ரஸ்ஸல் 25 பந்துகளில் 64 ரன்களை விளாசினார். இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

கடைசி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேகேஆர் அணியின் இளம் பவுலரான ஹர்சித் ராணாவின் அபார பவுலிங்கால் அந்த அணி வெற்றியை பெற்றது. ஐபிஎல் தொடரின் முதல் 2 போட்டிகள் போதுமான சுவாரஸ்யத்தை ரசிகர்களுக்கு கொடுக்காத சூழலில், இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே மயங்க் அகர்வால் மற்றும் கிளாசன் இருவரும் வம்புக்க்கு இழுத்த இளம் வீரர் ஹர்சித் ராணாவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 60 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. மயங்க் அகர்வாலை பார்த்து ஃபிளையிங் கிஸ் கொடுத்த சம்பவம் ரசிகர்களிடையே மத்தியில் விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாரூக் கானும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த போட்டியை காண நடிகர் ஷாரூக் கான் நேரில் வந்தார். விஐபி அறையில் இருந்து போட்டியை பார்த்த ஷாரூக் கான், ரஸ்ஸலின் அதிரடியால் உற்சாகமடைந்தார். ஆனால் கேகேஆர் அணி பேட்டிங் செய்கையில், 10வது ஓவரின் போது ஷாரூக் கான் விஐபி அறைக்குள் இருந்தார்.
அப்போது ஷாரூக் கான் புகை பிடித்தது தெரிய வந்தது. கொல்கத்தா மைதானத்திற்குள் யாருக்கும் புகைப்பிடிக்க அனுமதி கிடையாது. ஏற்கனவே ஒருமுறை கொல்கத்தா மைதானத்தில் ரசிகர்களுடன் அமர்ந்து போட்டியை பார்த்த போது, ஷாரூக் கான் புகைப்பிடித்ததால் சர்ச்சை எழுந்தது. தற்போது மீண்டும் அதே தவறை ஷாரூக் கான் செய்தது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது.