அகமதாபாத் : 2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 38 பந்துகள் மீதமிருந்த நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது.
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தியது. அப்போது இருந்து போட்டி முடியும் வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக பந்துவீச்சில் ஸ்டார்க் சிறப்பாக செயல்பட்டு மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். 39 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

அப்போது கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் ஒவ்வொரு விக்கெட்டையும் ஆக்ரோஷமாக கொண்டாடினார். அவரது ஆக்ரோசத்தைக் கண்டு ரசிகர்களே மிரண்டு போனார்கள். அந்த அளவுக்கு அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் ஆக்ரோஷமான மனநிலையில் இந்த போட்டியை விளையாட வைத்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஹைதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எந்த சிரமமும் இன்றி 13.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அந்த அணி இரண்டு விக்கெட் இழந்த போதும், ஸ்ரேயாஸ் மற்றும் வெங்கடேஷ் கடைசி வரை நின்று சேஸிங்கை முடித்தனர். வெங்கடேஷ் 28 பந்துகளை 51 ரன்களும், ஸ்ரேயாஸ் 24 பந்துகளில் 58 ரன்களும் குவித்தனர்.
இந்த வெற்றியால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. கவுதம் கம்பீர் இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஆலோசகராக வந்த பின் அந்த அணி ஒவ்வொரு போட்டியிலும் ஆக்ரோஷமாக விளையாடி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பிளே ஆப் சுற்றுக்கே முன்னேறாத கொல்கத்தா அணி, தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதை எடுத்து கவுதம் கம்பீர் இந்திய அணிக்கும் தலைமைப் பயிற்சியாளராக வர வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.