அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே பிளே ஆஃப் சுற்றில் மிகப்பெரும் சேஸிங் சாதனையை நிகழ்த்தி உள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் முந்தைய சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
2002ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே ஆன பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் துவக்கம் முதலே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்திருந்தது.

அந்த அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்தது. அதன் பின் ஓரளவு ரன் குவித்தாலும் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தன. அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 55 ரன்களும், கிளாசன் 32 ரன்களும் எடுத்தனர். அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. 160 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா அணி சேஸிங் செய்தது.
அந்த அணியின் துவக்க வீரர்கள் ரகுமானுல்லா குர்பாஸ் 14 பந்துகளில் 23 ரன்களும், சுனில் நரைன் 16 பந்துகளில் 21 ரன்களும் குவித்தனர். அவர்கள் ஆட்டம் இழந்து சென்ற பின் வெங்கடேஷ் மற்றும் ஸ்ரேயாஸ் இணைந்து சேஸிங்கை செய்து முடித்தனர். வெங்கடேஷ் 28 பந்துவில் 51 ரன்கள், ஸ்ரேயாஸ் 24 பந்துகளில் 58 ரன்களும் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதை அடுத்து 13.4 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டி இருந்தது. ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் அதிக பந்துகள் மீதம் இருக்கும் வகையில் சேஸிங் செய்த அணிகளின் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 38 பந்துகள் மீதமிருந்த நிலையில் சேஸிங் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
முன்பு 2008 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக அரை இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 31 பந்துகள் மீதம் இருந்த நிலையில் சேஸிங் செய்து வெற்றி பெற்று இருந்தது. அதன் பின் 2017 ஆம் ஆண்டு இரண்டாவது தகுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 33 பந்துகள் மீதமிருந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேஸிங் செய்து வீழ்த்தி இருந்தது. அதன் பின் தற்போது 2024 முதல் தகுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 38 பந்துகள் மீதம் இருந்த நிலையில் சேசிங் செய்து வெற்றி பெற்றுள்ளது.