அகமதாபாத்: 2024 ஐபிஎல் தொடரின் முதல் பிளே ஆஃப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எந்த விதத்திலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியது.
முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து மாபெரும் தவறு செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அடுத்து பேட்டிங்கில் மிக மோசமாக சொதப்பியது. 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து பந்துவீச்சில் ஓரளவுக்காவது கொல்கத்தா அணிக்கு ஈடு கொடுத்து ஆடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 2 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்த முடிந்தது. எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. மேலும், 2.1 ஓவரிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது இரண்டு ரிவ்யூக்களையும் வீணடித்தது. இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தில் கொல்கத்தா வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ்-க்கு எல்பிடபுள்யூ கேட்டது. அம்பயர் அவுட் தராததால் ரிவ்யூ கேட்டது சன்ரைசர்ஸ் அணி. அப்போது பந்து லெக் ஸ்டம்ப்பை தகர்க்கவில்லை என்பதால் அவுட் கொடுக்கப்படவில்லை.
மீண்டும் மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் சுனில் நரைன் காலில் பந்து பட்டது. அப்போது எல்பிடபுள்யூ கேட்டு ரிவ்யூ செய்த போது, பந்து அவுட் சைடு ஆஃப் திசையில் பிட்ச் ஆகி இருந்தது. இதை அடுத்து அவுட் தர மறுக்கப்பட்டது. அதை பார்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உறைந்து போனார்.
அதன் பின் கொல்கத்தா அணி மிக எளிதாக வெற்றி பெற்றது. 160 ரன்கள் வெற்றி இலக்கை 16.4 ஓவர்களில் எல்லாம் சேஸிங் செய்து முடித்தது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2024 ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.