கொல்கத்தா : கேகேஆர் அணியால் ரூ.24.75 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க், நேற்றைய ஆட்டத்தில் விக்கெட் இல்லாமல் 53 ரன்களை விட்டுக் கொடுத்ததால் ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடி கொடுத்து கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு வீரருக்கு அளிக்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுதான். விராட் கோலி, தோனி, ரோகித் சர்மா, பும்ராவுக்கு கூட இவ்வளவு தொகையை ஐபிஎல் அணிகள் ஊதியமாக கொடுப்பதில்லை.

இதன் மூலமாக மிட்சல் ஸ்டார்க் வீசும் ஒவ்வொரு பந்துக்கும் ரூ.7,36,607 ஊதியமாக அளிக்கப்படும் என்று கணக்கிடப்பட்டது. இதனால் மிட்சல் ஸ்டார்க் பவுலிங் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. ஏனென்றால் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட வந்துள்ளார். இந்த நிலையில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மிட்சல் ஸ்டார்க் களமிறக்கப்பட்டார்.
அவர் வீசிய முதல் ஓவரிலேயே 5 ஒய்டுகள் உட்பட 12 ரன்கள் விளாசப்பட்டது. தொடர்ந்து அவரின் 2வது ஓவரில் 10 ரன்களும், 3வது ஓவரில் 5 ரன்களும் விட்டுக் கொடுத்தார். இதனால் 3 ஓவர்களில் மொத்தமாக 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்ததால், ஸ்டார்க் பவுலிங்கை வர்ணனையாளர்கள் பாராட்டினர். இந்த நிலையில் கடைசி ஓவருக்கு முன்பாக 19வது ஓவரை வீச மிட்சல் ஸ்டார்க் அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரில் 4 சிக்ஸ், ஒரு ஒய்டு உட்பட மொத்தமாக 26 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் மிட்சல் ஸ்டார்க் 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் வீழ்த்த முடியாமல் 53 ரன்களை விட்டுக் கொடுத்தது தெரிய வந்தது. அப்போது ஷாபாஸ் அஹ்மத் அடித்த அபார சிக்சரின் போது வர்ணனையில் இருந்தவர்கள், ரூ.25 கோடிக்கு வாங்கப்பட்ட வீரருக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்கலாம் என்று கிண்டல் செய்தனர்.
இதனை தொடர்ந்து மிட்சல் ஸ்டார்க்கை கேகேஆர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஐபிஎல் ரசிகர்கள் அனைவரும் கிண்டல் செய்து வருகின்றனர். இவர் ஒரு சிக்சரை குறைத்து கொடுத்திருந்தால் கூட, கடைசி ஓவரை ஹர்சித் ராணா எந்த பதற்றமும் இன்றி வீசியிருக்க முடியும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.