மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணியில் கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின்போது, தசை பிடிப்பு காரணமாக வெளியேறிய ராகுல் மீண்டும் இப்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டை போராடி டிரா செய்த இந்திய அணி, விசாகப்பட்டினத்தில் 17ம் தேதி தொடங்க உள்ள 2வது டெஸ்டில் வெற்றிபெற மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. எனவே காயத்திலிருந்து மீண்டதோடு, கர்நாடக அணிக்காக ரஞ்சியில் களமிறங்கி ராஜஸ்தான் அணிக்கு எதிராக அரை சதம் மற்றும் சதம் விளாசி ஃபார்மை நிரூபித்த ராகுலை அணியில் சேர்த்துள்ளது பிசிசிஐ.
பிசிசிஐ விதிமுறைப்படி, காயத்திலிருந்து மீண்ட வீரர், உள்ளூர் ஆட்டத்தில் களமிறங்கி தனது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டியது கட்டாயம். அந்த விதிமுறையை பூர்த்தி செய்துவிட்டார் ராகுல். எனவே, விசாகபட்டினம் டெஸ்ட் போட்டியில் விஜயுடன் சேர்ந்து ஓப்பனிங்கில் ராகுல் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
கடந்த இரு டெஸ்டுகளையும் சேர்த்து கம்பீர் சேர்த்த ரன்கள் 108 மட்டுமே என்பதால் அவரை கழற்றிவிட்டு, ராகுலை அந்த இடத்தில் ஆட வைக்க அணி நிர்வாகம் முடிவெடுக்கலாம் என தெரிகிறது. 2 வருடங்கள் கழித்து இந்திய டெஸ்ட் அணியில் கம்பீருக்கு இடம் கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்வதில் கம்பீர் தடுமாறிவிட்டார். தற்போது ராகுல் இந்திய அணியின் 16வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.