கொல்கத்தா: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ள நிலையில், இந்திய அணியின் துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகினார். அவரின் காணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் நடக்க கூட முடியாததால் மற்ற வீரர்களின் உதவியுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் அந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா களமிறங்கவே இல்லை. மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது எலும்பு முறிவு ஏற்படவில்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்டியா இந்திய அணியுடன் மீண்டும் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால் உலகக்கோப்பை தொடருக்குள் காயம் குணமடைய வாய்ப்பில்லை என்பதால், ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று ஆல்ரவுண்டர் ரோலுடன் இந்திய அணியின் துணை கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். முதல் சில போட்டிகளில் ரோகித் சர்மா களத்தில் இல்லாத நேரங்களில் ஃபீல்டிங் மாற்றங்களை ஹர்திக் பாண்டியா செய்து வந்தார். தற்போது ஹர்திக் பாண்டியா விலகியதால், இந்திய அணியின் துணை கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக கேஎல் ராகுல் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கேஎல் ராகுல் மொத்தமாக 237 ரன்களை விளாசி இருக்கிறார். குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி திணறிய போது கேஎல் ராகுல் அபாரமாக பேட்டிங் செய்து அணியை மீட்டார். அதேபோல் டிஆர்எஸ் விவகாரத்தில் கேஎல் ராகுலின் செயல்பாடுகள் தோனிக்கு நிகராக இருப்பதால், ரோகித் சர்மா அவரை முழுமையாக நம்பி வருகிறார். அதேபோல் ஹர்திக் பாண்டியாவுக்கு முன்பாகவே இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் கேஎல் ராகுலுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.