கொழும்பு: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் சமன் செய்துள்ளார்.
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் சுமார் 5 மாதங்களுக்கு பின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

அதேபோல் கேஎல் ராகுல் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராகவும் இடம்பிடித்துள்ளார். இவர் அணிக்கு திரும்பியதால், ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 49 பந்துகளில் 4 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உட்பட 56 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் 52 பந்துகளில் 10 பவுண்டரிகள் உட்பட 58 ரன்கள் சேர்த்தார்.
இரு தொடக்க வீரர்களும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்ததால், இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்தது. இதன்பின் 4வது பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் களமிறங்கினார். தொடக்கத்தில் நிதானம் காட்டிய அவர், பின்னர் ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் இரு பவுண்டரிகளை விளாசினார். இதன்பின்னர் 24.1 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டமும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கேஎல் ராகுல் 17 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்தப் போட்டியில் கேஎல் ராகுல் 14 ரன்கள் எடுத்தபோது, ஒருநாள் கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதுவரை 53 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள கேஎல் ராகுல் 2,003 ரன்களை சேர்த்துள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவருமே 53 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். இந்தப் பட்டியலில் அனுபவ வீரர் ஷிகர் தவான் 48 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்து முதலிடத்திலும், நவ்ஜோத் சிங் சித்து 52 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்து 2வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் 52 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.