பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 213 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்ட லக்னோ அணியில் 23 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
இதில் கே எல் ராகுல் பொறுமையாக விளையாடி 20 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். எனினும் மார்க் ஸ்டோனிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல், என்னால் நம்பவே முடியவில்லை.

சின்னசாமி மைதானத்தில் மட்டும்தான் பல அணிகள் கடைசி பந்தில் கூட வெற்றி பெற்று இருக்கிறது. நாங்கள் இருந்த இக்கட்டான நிலையில் இருந்து ஆட்டத்தை வென்றது நிச்சயம் பிரமிக்க வைக்கிறது. ஆட்டத்தின் தொடக்கத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. எங்களுடைய இரண்டு மூன்று விக்கெட்டுகளை அவர்கள் விரைவாக வீழ்த்தி எங்களை நெருக்கடிக்கு ஆளாகினார்கள்.
நாங்கள் இன்று வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெற்றோம் என்றால் அது எங்களுடைய கீழ் வரிசை வீரர்களால் தான். என்னுடைய பேட்டிங் திருப்திகரமாக இல்லை. நான் அதிக ரன்கள் அடிக்க வேண்டும். என்னுடைய ஸ்ட்ரைக் ரேட்டை அதிகப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.

இன்று மூன்று விக்கெட்டுகளை விரைவாக இழந்தோம். இதனால் என்னுடைய ஆட்டத்தின் வேகத்தை நான் குறைத்துக் கொண்டேன். கடைசிவரை நின்று நிக்கோலஸ் பூரானுக்கு துணையாக விளையாட வேண்டும் என நினைத்தேன். பேட்டிங் வரிசையில் ஐந்து, ஆறு மற்றும் ஏழாவது இடத்தில் விளையாடுவது தான் மிகவும் கடினமானது.
இந்த இடத்தில் தான் நாம் ஆட்டத்தில் ஜெயிக்கிறோமா, இல்லை தோல்வி அடைகிறோமா என்பதை நிர்ணயிக்கும். மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகியோர் பலமான வீரர்கள்,அதிரடியாக விளையாட கூடியவர்கள். நிக்கோலஸ் பூரான் இந்த ஆண்டில் மட்டும் இரண்டு இன்னிங்ஸ் அதிரடியாக விளையாடுகிறார். மொத்தத்தில் மகிழ்ச்சி அளிக்கிறது என கே எல் ராகுல் கூறியுள்ளார்.