மும்பை: இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கேஎல் ராகுல் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை பயணிக்க உள்ளது தெரிய வந்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் சர்வதேச ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆட்டம் மழையால் கைவிடப்பட்டாலும், இந்திய அணிக்கு உலகக்கோப்பை பற்றிய தெளிவு கிடைத்துள்ளது. தொடக்க வீரராக சுப்மன் கில் சொதப்பினால் இஷான் கிஷனை ஆட வைக்க முடியும் என்பது தெளிவாகியுள்ளது.

அதேபோல் பேக் அப் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தான் சரி என்பதையும் ஒரே போட்டியில் நிரூபித்துவிட்டார். அதேபோல் கீழ் வரிசையில் ஷர்துல் தாக்கூருக்கு பதில் முகமது ஷமியே தேவை என்ற தெளிவும் இந்திய அணி நிர்வாகத்திற்கு கிடைத்துள்ளது. இதனால் உலகக்கோப்பை அணியை எளிதாக தேர்வு செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த கேஎல் ராகுல் முழு ஃபிட்னஸை எட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் இன்று விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் இலங்கை பயணிக்க உள்ளார். முன்னதாக இவர் முழு ஃபிட்னஸை எட்டாததால், குரூப் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உறுதி செய்திருந்தார்.
தற்போது இலங்கையில் உள்ள இந்திய அணியுடன் கேஎல் ராகுல் இணையவுள்ளார். முழு ஃபிட்னஸை எட்டிய உடன், தனது மனைவி ஆதியா ஷெட்டியுடன் இணைந்து கர்நாடகாவில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி கோயிலில் பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்த நிலையில் நாளை இந்திய அணி நேபாளம் அணியுடன் மோதவுள்ளது.
கேஎல் ராகுல் இந்திய அணியுடன் இணையும் பட்சத்தில் உடனடியாக இந்திய அணியில் மாற்றம் நடக்குமா, பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் நீக்கப்படுவாரா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன் இல்லாததால், தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.