மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அணியின் மூத்த வீரரான கே.எல்.ராகுலின் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். "இன்னும் ஒரு தொடரில் சொதப்பினால், இந்திய நிர்வாகத்தின் பொறுமை போய்விடும்" என்று அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
சொந்த மண்ணில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கே.எல்.ராகுல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரி வெறும் 17 தான். அதிகபட்ச ஸ்கோரே 39 ரன்கள் தான்.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகிய நிலையில், அணியின் மூத்த வீரரான ராகுல் தனது பொறுப்பை உணர்ந்து டாப் ஆர்டரில் ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மீண்டும் ஏமாற்றத்தையே பரிசளித்தார். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் ஓரளவு சிறப்பாக ஆடிய ராகுல், தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறினார்.
இதுகுறித்துத் தனது யூடியூப் சேனலில் பேசிய ராபின் உத்தப்பா, ராகுலை எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார். "அவர் ஒரு மூத்த வீரராக இருந்தாலும், அணியில் தனது இடத்தைத் தக்கவைக்க அவர் ரன் அடித்தே ஆக வேண்டும். நான் உண்மையைச் சொல்கிறேன்... இந்தத் தொடரைப் போலவே, இன்னும் ஒரு தொடரில் அவர் சுமாராக ஆடினார் என்றால், நிச்சயம் நிர்வாகத்தின் பொறுமை போய்விடும். அதன் பிறகு அவரை அணியிலிருந்து தூக்கிவிடுவார்கள்" என்று உத்தப்பா கூறியுள்ளார்.
அதேநேரம், ராகுலுக்கு ஆதரவாகவும் சில கருத்துக்களை உத்தப்பா முன்வைத்தார். "ராகுலின் பேட்டிங் வரிசை டெஸ்ட் அணியில் தொடர்ந்து மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இத்தனை மாற்றங்களுக்கு இடையிலும், அவர் இந்த அளவுக்கு ரன் குவித்திருப்பதே பெரிய விஷயம் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் நிறையச் சவால்களைச் சந்தித்து வருகிறார்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
கே.எல்.ராகுல் இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவ்வளவு அனுபவம் இருந்தும், அவரது பேட்டிங் சராசரி 35-க்குச் சற்று மேலே தான் உள்ளது. ஒரு மூத்த வீரருக்கு இந்தச் சராசரி போதாது என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். நல்ல தொடக்கம் கிடைத்தாலும், அதை பெரிய ஸ்கோராக மாற்ற ராகுல் தவறுவதே அவரது முக்கியப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய அணி தற்போது ஒரு மாற்றத்துக்கான கட்டத்தில் இருக்கும் சூழலில், மூத்த வீரர்கள் நிலைத்து ஆட வேண்டியது அவசியம். அடுத்த டெஸ்ட் தொடர் ராகுலுக்கு வாழ்வா? சாவா? ஆட்டமாக மாறலாம். ஆனால், அடுத்த டெஸ்ட் தொடருக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளன.