சென்னை: இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் இடத்தை கேஎல் ராகுல் நிரப்பிவிட்டதாக அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டரை 15 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிக் காத்தவர்கள் தோனி மற்றும் யுவராஜ் சிங். தொடக்க வீரர்கள் சொதப்பினாலும் இருவரும் இணைந்து எண்ணற்ற போட்டிகளில் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளனர். இவ்வளவு ஏன் இருவரும் இணைந்து இந்திய அணிக்காக 28 ஆண்டுகளுக்கு பின், உலகக்கோப்பையையே வென்றனர்.

இவர்களுக்கு பின் இந்திய அணியில் மிடில் ஆர்டரில் நம்பிக்கையான பேட்ஸ்மேன்கள் உருவாகவில்லை. காயம், வாய்ப்புகள் என்று எவ்வளவோ வீரர்களை முயற்சித்தும், இந்திய அணியால் மிடில் ஆர்டரில் சிறந்த பேட்ஸ்மேனை உருவாக்க முடியவில்லை. இந்த நிலையில் இந்திய அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், யுவராஜ் சிங் மற்றும் தோனியின் ஓய்வுக்கு பின் மிடில் ஆர்டரில் நம்பிக்கையான பேட்ஸ்மேனை இந்திய அணி நீண்ட நாட்களாக தேடி வந்தது.
அந்த இடத்தை கேஎல் ராகுல் நிரப்பிவிட்டார் என்று தான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை இந்திய அணியின் நம்பர் 5 பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் தான். ரிஷப் பண்ட் காயத்திற்கு முன், கேஎல் ராகுல் பேக் அப் விக்கெட் கீப்பராக தான் இருந்தார். ஆனால் இப்போது நேரடி விக்கெட் கீப்பராக செயல்படவுள்ளார். இதனால் கேஎல் ராகுல் இடத்தை இஷான் கிஷன் சிறப்பாக பிடித்துக் கொண்டுள்ளார்.

கேஎல் ராகுலுக்கு சிறிய காயம் இருந்தாலும், முதல் போட்டிக்கு முன்பாக தயாராக இருப்பார் என்று நினைக்கிறேன். ஒருவேளை கேஎல் ராகுல் தயாராகவில்லை என்றாலும், சஞ்சு சாம்சன் பேக் அப் வீரராக பயணிக்க உள்ளார். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த இரு நாட்களாக இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் யோயோ டெஸ்ட் வைக்கப்பட்டது.
அதில் கேஎல் ராகுல் மட்டும் பங்கேற்கவில்லை. கேஎல் ராகுல் இன்னும் காயத்தில் இருந்து மீண்டு வராததால், அவருக்கு யோயோ டெஸ்ட் வைக்கப்படவில்லை. இருப்பினும் கேஎல் ராகுல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.