நார்த்தம்ப்டன்: இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணியில் களமிறங்கிய கேஎல் ராகுல் அபாரமாக சதம் விளாசினார். நார்தாம்டனின் நடைபெற்ற இரண்டாவது நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் களமிறங்கிய கேஎல் ராகுல் தொடக்க வீரராக ஜெயிஸ்வாலுடன் விளையாடினார். ஜெய்ஸ்வால் 26 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

எனினும் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கே எல் ராகுல், கருண் நாயர் ஆகியோர் அபாரமாக விளையாடி இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டனர். இதில் கே எல் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.நிதானமாக விளையாடிய கேஎல் ராகுல் 102 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
மறுமுனையில் 71 பந்துகளில் கருண் நாயர் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று நடுவரிசையில் விளையாடி அதிரடி காட்டிய துருவ் ஜூரல் 87 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார்.இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கே எல் ராகுல் 151 பந்துகளில் சதம் விளாசினார்.
இறுதியில் 168 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதில் 15 பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடங்கும். 81 ஓவர் முடிவில் இந்தியா ஏ அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த ஆட்டத்தில் கே எல் ராகுல் தொடக்க வீரராக விளையாடி சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ராகுல் தொடக்க வீரராகவே களம் இறங்குவார் என்பது உறுதியாகிவிட்டது.
இதேபோன்று அபிமன் ஈஸ்வரன் மூன்றாவது வீரராக விளையாடியிருப்பதன் மூலம் அவரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அந்த இடத்தில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக சாய் சுதர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாக சிறிது காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20ஆம் தேதி தொடங்க உள்ளது.