சென்னை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இஷான் கிஷனுக்கு பதிலாக கேஎல் ராகுலை இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடனும் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கடந்த 3 நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வரும் சுப்மன் கில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. இதனால் மாற்று தொடக்க வீரராக இஷான் கிஷன் அல்லது கேஎல் ராகுல் இருவரில் யாரை களமிறக்குவது இந்திய அணிக்கு நல்லது என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.
இஷான் கிஷனை பொறுத்தவரை மாற்று தொடக்க வீரர் என்றாலும், அண்மை காலங்களில் அவரை இந்திய அணி மிடில் ஆர்டர் வீரராகவே பார்க்கிறது. சரியான சொல்ல வேண்டுமென்றால் ரிஷப் பண்ட் செய்து வந்த ரோலை கொடுத்துள்ளது. மிடில் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேனின் தேவை அதிகரித்ததன் காரணமாகவே இஷான் கிஷன் பிளேயிங் லெவனில் விளையாடி வருகிறார்.
அதேபோல் ஸ்பின்னர்களை அட்டாக் செய்யும் திறனும், மிடில் ஓவர்களில் ரன் ரேட்டை குறையவிடாமல் பார்த்து கொள்ளும் திறமையும் இஷான் கிஷனுக்கு இருப்பதால் அவரை மிடில் ஆர்டரிலேயே விளையாட வைக்கலாம். இதனால் விக்கெட் கீப்பரான கேஎல் ராகுலை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் கேஎல் ராகுல், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எளிதாக சமாளிக்கக் கூடிய வீரராக இருக்கிறார். ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் மூவரும் இணைந்து அட்டாக்கை தொடங்கும் போது டெக்னிக்கலாக பலம் வாய்ந்த கேஎல் ராகுலால் அவர்களை சமாளித்து எளிதாக ரன்களை சேர்க்க முடியும். இதனால் சுப்மன் கில் இடத்தில் கேஎல் ராகுலை களமிறக்குவதே சரியான முடிவாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.