டி20 கிரிக்கெட் தொடர்
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வில் இருந்து வந்த இந்தியாவின் முன்னணி வீரர்கள் டி20 தொடருக்கு அணிக்கு திரும்புகின்றனர். டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு தயாராகும் விதமாக இந்த போட்டி நடைபெறுவதால் முழு பலத்துடன் களமிறங்குகிறது. இந்நிலையில் இதில் இருந்து தான் கே.எல்.ராகுல் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் என்ன
டி20 தொடருக்காக தேர்வு செய்யப்பட்டிருந்த கே.எல்.ராகுலுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குவாரண்டைனில் இருந்த வந்த அவர், தற்போது தான் குணமடைந்து வந்துள்ளார். பாதிப்பில் இருந்து வெளியே வந்தாலும், இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை, அவரால் பயணம் செய்ய முடியாது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரியின் விளக்கம்
இதுகுறித்து பேசியுள்ள அதிகாரி ஒருவர், கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில், கடைசி கட்ட உடற்தகுதி தேர்வு இருக்கும். ஆனால் கே.எல்.ராகுல் அதற்கே இன்னும் தயாராகாமல் இருக்கிறார். அணியில் இஷான் கிஷான் இருப்பதால் மாற்று வீரர் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனத்தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை
ஐபிஎல் தொடரின் போது காயத்தால் பாதிக்கப்பட்ட கே.எல்.ராகுல், அதன்பின்னர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. டி20 உலகக்கோப்பைகான டிராவிட்டின் திட்டத்தில் கே.எல்.ராகுல் முக்கிய நபராக இருக்கிறார். ஆனால் அவர் அதற்கு தயாராகும் போட்டியில் இப்படி தொடர்ச்சியாக விளையாடமுடியாமல் போவதால், அவர் டி20 உலகக்கோப்பையில் இருந்தே விலகும் சூழல் உருவாகியுள்ளது.