“கே எல் ராகுலை கோபத்துடன் பார்த்த ஒரே ..".. 2020 ஐபிஎல் சம்பவத்தை பகிர்ந்த வாசிம் ஜாஃபர்
மும்பை: இந்திய அணியின் மூத்த வீரர் கே எல் ராகுல் எப்போதுமே அமைதியான குணம் கொண்டவர். ஆனால், அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது, ஒரு போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் மிகக் கடுமையாக கோபமடைந்த சம்பவம் குறித்து முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2018 முதல் 2021 வரை பஞ்சாப் கிங்ஸ் அணியில் கே எல் ராகுல் விளையாடினார். அந்த காலகட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த வாசிம் ஜாஃபர், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது பற்றி பேசினார். "இயல்பாகவே ராகுல் மிகவும் அமைதியானவர், தனது எல்லைக்குள்ளேயே இருக்க விரும்புபவர். அவர் கோபப்பட்டோ, நிதானம் இழந்தோ நான் பார்த்ததே இல்லை. ஆனால், நான் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்தபோது ஒவ்வொரு போட்டியும் எங்களுக்குப் பெரும் ஏமாற்றமாகவே முடிந்தது. எளிதாக வெல்லக்கூடிய பல போட்டிகளில், கடைசி ஓவரில் நூலிழையில் தோற்றோம்.

அப்படி ஒரு எளிதான போட்டியில் நாங்கள் தோற்ற பிறகு, ராகுல் முதல் முறையாக மிகக் கடுமையாகக் கோபமடைந்ததை நான் பார்த்தேன். அவர் யாரையும் தவறாகப் பேசவில்லை, ஆனால் அணியின் மோசமான ஆட்டத்தால் அவர் எவ்வளவு தூரம் விரக்தியடைந்தார் என்பதை அவரது முகம் காட்டியது. நான் ராகுலை கோபத்துடன் பார்த்த ஒரே தருணம் அதுதான்" என்று தெரிவித்தார்.
கடந்த 2020-ல் டெல்லி கேப்பிடல்ஸ்-க்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 2 ரன்களில் தோல்வி என பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டது. அந்த சீசனில் 670 ரன்கள் குவித்து ராகுல் ஆரஞ்சு தொப்பியை வென்றிருந்தார். 2021 சீசனிலும் ராஜஸ்தானிடம் 2 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவிடம் 6 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்று பஞ்சாப் 6-வது இடத்தையே பிடித்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 55 போட்டிகளில் 2,548 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள ராகுல், பின்னர் லக்னோ அணிக்காக விளையாடினார். கடந்த 2025 முதல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், 2026 ஐபிஎல் தொடரில் 14 இன்னிங்ஸ்களில் 593 ரன்கள் குவித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications

