
ரசிகர்களுக்கு ஏமாற்றம்
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போதும், இந்திய ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றம் ஏற்பட்டது. அதாவது ஆட்ட நாயகன் விருதை சூர்யகுமார் யாதவுக்கு வழங்குவார்கள் என எதிர்பார்த்த போதும், கே.எல்.ராகுலுக்கு வழங்கி அதிர்ச்சி தந்தனர். அதிக ஸ்கோர் அடித்த வீரர், அதிக விக்கெட்கள் எடுத்த வீரர் அல்லது இரண்டிலுமே சிறப்பாக இருந்தவர்களுக்கு தான் இந்த விருது வழங்கப்படும். அப்படி பார்த்தால் நேற்று சூர்யகுமார் யாதவ் தான் மிகச்சிறப்பாக செயல்பட்டார்.

இருவரின் ஸ்கோர்
ஓப்பனிங் வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 203 ஆகும். ஆனால் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளிலேயே 61 ரன்களை அடித்துவிட்டார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 277 ஆகும். இருவருமே எந்தவித கேட்ச்-களும் பிடிக்கவில்லை. இப்படி இருக்கையில் சூர்யகுமார் யாதவுக்கு ஏன் விருது தரப்படவில்லை என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

கே.எல்.ராகுல் விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து கே.எல்.ராகுலே வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், இந்த போட்டியில் எனக்கு 2 ஆச்சரியங்கள் உள்ளன. 180 ரன்கள் வரும் என கணக்கிட்ட போது 237 ரன்கள் வந்தது. மற்றொரு விஷயம் எனக்கு ஆட்ட நாயகன் விருது தந்தது தான். சூர்யகுமார் யாதவுக்கு தான் நியாயப்படி கொடுத்திருக்க வேண்டும். அவர் தான் ஆட்டத்தையே மாற்றி அமைத்தார். மிடில் ஆர்டரில் அதிரடி காட்டுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த விருதுக்கு அவர் தான் தகுதியானவர் என கே.எல்.ராகுல் பேசினார்.

வியப்படைகிறேன்
தொடர்ந்து பேசிய அவர், தென்னாப்பிரிக்காவுடனான 2 போட்டிகளிலும் 2 வெவ்வேறு களங்களில் அரைசதம் அடித்துள்ளது மனதிற்கு நிறைவாக உள்ளது. மிடில் ஆர்டரில் விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் பார்ட்னர்ஷிப் நன்றாக இருந்தது. தினேஷ் கார்த்திக்கிற்கு குறைந்த பந்துகளே கிடைக்கின்றன. ஆனால் அதிலும் அவர் அதிரடி காட்டுவது வியப்பாக இருக்கிறது என கே.எல்.ராகுல் புகழ்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications