“இப்படி ஒரு ப்ளேயரா.. நம்பவே முடியல”..முதல் டி20ல் சூர்யகுமார் செய்த விஷயம்.. கே.எல்.ராகுல் வியப்பு
திருவனந்தபுரம்: சூர்யகுமார் யாதவை பார்த்து களத்தில் அதிர்ச்சியடைந்து நின்றதாக கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 106/8 ரன்களை எடுத்தது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 16.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி கண்டது.

இந்திய அணியின் திணறல்
இந்திய அணி 10 ஓவர்களுக்குள் இந்த குறைந்த இலக்கை எட்டிவிடும் என எதிர்பார்த்த நிலையில் தென்னாப்பிரிக்காவை விட மோசமாக தடுமாறியது. ரோகித் சர்மா டக் அவுட், விராட் கோலி 3 ரன்கள் என தடுமாறிய போது, கே.எல்.ராகுலும் 31 பந்துகளில் வெறும் 14 ரன்கள் என மிகவும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டுடன் மட்டுமே விளையாடி வந்தார். ஆனால் சூர்யகுமார் யாதவ் வந்தவுடன் கே.எல்.ராகுலின் ஒட்டுமொத்த ஆட்டமும் மாறியது.

கே.எல்.ராகுல் விளக்கம்
இந்நிலையில் களத்தில் நடந்த அந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து கே.எல்.ராகுல் பகிர்ந்துள்ளார். இதுபோன்ற கடினமான பிட்ச்-களில் நாங்கள் விளையாடியுள்ளோம். எனவே பொறுமையாக நின்று தான் ரன் குவிக்க வேண்டும். ஆனால் சூர்யகுமார் யாதவ் மட்டும் எப்படி வந்தவுடன், அப்படிபட்ட ஷாட்களை ஆடினார் என்பதை என்னால் இன்னமும் நம்பவே முடியவில்லை.

அது ஒரு பாடம்
பந்துகள் எப்படி வேகமாக வருகிறது, ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகிறது என்பதை நாங்கள் பார்த்திருந்தோம். சூர்யகுமார் யாதவ் வந்தவுடன் முதல் பந்திலேயே அடிவாங்கினார். ஆனால் அடுத்த பந்தில் இருந்தே தனது வழக்கமான அதிரடியை காட்ட தொடங்கினார். இந்த களத்திலும் அவர் நம்பிக்கையுடன் ஆடியது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. அதே நம்பிக்கையில் நானும் பேட்டை சுழற்றினேன் என கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.

சிறப்பான பார்ட்னர்ஷிப்
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் இந்த ஜோடி தான். 17 ரன்களுக்கு 2 விக்கெட்கள் என தடுமாறிய போது ஜோடி சேர்ந்த சூர்யகுமார் 33 பந்துகளில் 50 ரன்களும், கே.எல்.ராகுல் 56 பந்துகளில் 51 ரன்களை அடித்தனர்.


Click it and Unblock the Notifications