மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது கே எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அந்த தொடரில் இருந்து விலகினார். இதன் பிறகு இந்திய அணியில் சர்பிராஸ் கான், துருவ் ஜூரல் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு சர்பராஸ், ஜூரல் தங்களுடைய இடத்தை உறுதி செய்தனர்.
இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே எல் ராகுல் அணிக்கு திரும்பி இருக்கிறார். இதனால் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லை சர்பராஸ்கானுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதேபோன்று பண் அணிக்கு திரும்பி இருப்பதால் அவர்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்று தெரிகிறது.

இதனால் சர்பராஸ் கான், துருவ் ஜூரல் மீண்டும் வழக்கம்போல் பெஞ்சில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கே எல் ராகுல் தற்போது துலீப் கோப்பையில் விளையாடிவிட்டு பெங்களூர் திரும்பி இருக்கிறார். வரும் 12ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு இந்திய அணியுடன் அவர் வந்து ஐந்து நாள் பயிற்சி முகாமில் பங்கேற்க இருக்கின்றார்.
இந்த சூழலில் கே எல் ராகுல் இடம் ஒரு நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் தொகுப்பாளர் ஒருவர் தான் உங்களுக்கு ஐந்து வீரர்களின் பெயரை ஒவ்வொன்றாக வழங்குவேன். அவர்களை நீங்கள் வரிசைப்படுத்த வேண்டும். ஆனால் நான் எந்த வீரரின் பெயரை எப்போது சொல்வேன் என்று உங்களுக்கு தெரியாது. இதனால் நீங்கள் ஆரம்பத்தில் இருந்து சரியான வீரர்களை உங்களுடைய மனதிற்கு ஏற்ற வகையில் வரிசைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இந்த சவாலை ஒப்புக்கொண்ட கேஎல் ராகுலும் முதலில் டிராவிஸ் ஹெட் பெயரை வரிசைப்படுத்த தொகுப்பாளர் கூறினார். உடனே யோசித்த கே எல் ராகுல் டிராவிஸ் ஹெட் நல்ல வீரராக இருந்தாலும், அவரைவிட சிறந்த வீரர்கள் பெயரை நீங்கள் சொல்ல வாய்ப்பு இருப்பதால் தான் அவருக்கு ஐந்தாவது இடத்தை வழங்குவதாக கூறினார். ரோகித் சர்மாவின் பெயரை தொகுப்பாளர் கூறியதும் யோசிக்காமலே ராகுல் இரண்டாவது இடத்தை அவருக்கு வழங்கினார்.
பாபர் அசாம் பெயரை கூறியதும் கொஞ்சம் யோசித்த கே எல் ராகுல் அவருக்கு நான்காவது இடத்தை வழங்கினார். இதேபோன்று சூரிய குமார் யாதவ் பெயரை கேட்டவுடன் கே எல் ராகுல் அவருக்கு மூன்றாம் இடத்தை வழங்கினார். இந்த நேரத்தில் கடைசியாக விராட் கோலி பெயரை சொன்னதும் தான் விராட் கோலி பெயரை நீங்கள் கடைசியாக தான் சொல்வீர்கள் என முன்பே எதிர்பார்த்துதான், முதல் இடத்தை காலியாக வைத்திருந்தேன் என்று கூறி விராட் கோலிக்கு அவர் முதலிடத்தை தந்தார்.
இது ரோகித் சர்மா ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. இதேபோன்று டாப் 5 பவுலர்கள் யார் என்று கே எல் ராகுல் இடம் தொகுப்பாளர் வரிசைப்படுத்த சொன்னார். அதற்கு கே எல் ராகுல் ஆண்டர்சனை இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க வீரரான ஸ்டெயினை முதல் இடத்திலும், ரஷீத் கானை நான்காவது இடத்திலும், பும்ராவை மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் நசிம் ஷாவை ஐந்தாவது இடத்திலும் வைத்தார்.
பேட்ஸ்மேன்களில் இந்திய வீரர்களுக்கு டாப் 3 இடம் வழங்கிய கேஎல் ராகுல் பவுலர்கள் என வந்த உடன் பும்ராவுக்கு மூன்றாவது இடத்தை வழங்கியிருக்கிறார். ஆனால் ராகுல் பவுலர்கள் விஷயத்தில் சரியான முறையில் வரிசைப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.