
வங்கதேச டெஸ்ட் தொடர்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 4வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளில் வெற்றி கண்டால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும். முதல் இரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணியும், 3வது இடத்தில் இலங்கை அணியும் போட்டிப்போட்டு வருகின்றன. இந்நிலையில் வங்கதேசத்தை வீழ்த்தி அந்த வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள கேப்டன் கே.எல்.ராகுல் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

இங்கிலாந்தின் ஃபார்முலா
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளிலும் இங்கிலாந்து தான் வெற்றி பெற்றது. இந்த 2 போட்டிகளிலும் டெஸ்ட் வடிவம் என்றும் பாராமல் இங்கிலாந்து ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறையை வெளிக்காட்டியிருந்தது. குறிப்பாக ஆட்டத்தின் முதல் நாளன்றே 500 ரன்கள் அடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கே.எல்.ராகுல் பேச்சு
இந்நிலையில் இதுகுறித்து தான் கே.எல்.ராகுல் பேசியுள்ளார். அதில், இங்கிலாந்தின் 2 போட்டிகளையும் பார்த்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டை அதுபோன்று ஆடிய முறை மிகவும் பிடித்திருந்தது. எந்தவித பயமும் இல்லாமல், தொடக்கத்தில் இருந்தே ஆட்டத்தை அப்படி கொண்டு செல்ல வேண்டும். அது அவர்களுக்கு பலனை கொடுத்தது. அதை இங்கும் பயன்படுத்தலாம்.

தொடர்ச்சியாக இருக்காது
ஒவ்வொரு அணிக்கும் தனித்தனி அணுகுமுறைகள் இருக்கும். ஆனால் மற்ற அணிகளிடம் இருந்து சில விஷயங்களை கற்றுக்கொண்டு செய்வது புதிதல்ல. ஆனால் அதே போன்ற அணுகுமுறையையே எப்போதும் பயன்படுத்தக்கூடாது. கால சூழல்களுக்கு ஏற்ப அதில் மாறுபாடு இருக்கும். அதற்கேற்றார் போல இந்தியாவும் மாறிக்கொள்ளும்.

இனி அதை தான் செய்வோம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கண் எதிரே உள்ளது. எனவே அதற்காக ஆக்ரோஷமான அணுகுமுறையை கையாள வேண்டும். ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு செஷனிலும் அதனை சுழற்சி முறையில் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் என்றால் இப்படி தான் ஆட வேண்டும் என்று எதுவும் இல்லை. மாற்றங்கள் வந்தால் தான் சிறப்பான போட்டியாக அமையும் என கே.எல்.ராகுல் கூறியுள்ளார். இந்திய அணி டி20 கிரிக்கெட்டிலும் ஆக்ரோஷ அணுகுமுறையை தான் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications