கொழும்பு: இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் தான் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேன் யார், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான கேஎல் ராகுல் ஆடிய ஆட்டம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான சதமும், இலங்கை அணிக்கு எதிரான 39 ரன்களும் கேஎல் ராகுலின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக அமைந்தது. அதேபோல் குல்தீப் யாதவ், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோருக்கு ஆலோசனை கூறி சிறந்த விக்கெட் கீப்பராகவும் கேஎல் ராகுல் செயல்பட்டார். இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கேஎல் ராகுலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், இந்திய அணியின் நம்பர் 4 இடத்திற்கான சரியான வீரர் கேஎல் ராகுல் தான். இதனால் நம்பர் 5 வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் என்று யாரை வேண்டுமானாலும் நிரப்பலாம். ஆனால் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரோலுக்கு கேஎல் ராகுல் தான் சிறந்த வீரர் என்பதை நிரூபித்துவிட்டார். பாகிஸ்தான் போட்டியில் கேஎல் ராகுல் மாற்று வீரராக களமிறங்கி சதம் விளாசி இருக்கிறார்.
அதேபோல் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு எதிராகவும் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்துள்ளார். இதன் மூலமாக உலகக்கோப்பை தொடருக்கு முன்பாகவே கேஎல் ராகுல் தான் விக்கெட் கீப்பர் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை அணி நிர்வாகமும் ஆசியக் கோப்பை தொடரிலேயே உறுதியாக கூறிவிட்டது என்றே நினைக்கிறேன். ஒருவேளை இஷான் கிஷனை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக முடிவு செய்திருந்தால், அவர் நிச்சயம் விக்கெட் கீப்பராக செயல்பட்டிருப்பார்.
ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. இதனால் இந்திய அணியின் இன்னொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் யார் என்பது மட்டுமே அடுத்த கேள்வி என்று தெரிவித்துள்ளார்.