மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் கே எல் ராகுல் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 500 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் ராகுலை டி20 அணியிலும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, டி20 கிரிக்கெட் பொறுத்தவரை ராகுலின் கதை முடிவடைந்து விட்டது என்று கூறியுள்ளார். இது குறித்து பேசி அவர் ராகுல் உண்மையிலே நல்ல வீரர்.

அவருடைய ஐபிஎல் தொடரில் அடித்த ரன்களை எல்லாம் பாருங்கள். நிச்சயம் சிறப்பானதாக இருக்கும். கடந்த சில தொடர்களில் அவரை போல் 600 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் வேறு யாரும் கிடையாது. எனினும் ராகுல் சில சமயம் டி20 கிரிக்கெட்டில் மெதுவாக ஆடுகிறார் என்ற பெயரை பெற்று விட்டார்.
ராகுலை அதிரடியாக ஆடுவதில் இருந்து ஏதாவது தடுக்கிறது என்றால் அது அவருடைய மனதில் தான் என்று நினைக்கின்றேன். சில சமயம் நெருக்கடியான கட்டத்தில் ராகுலின் கால் நடுங்கும். இதுவே அவருடைய மன வலிமை சரியான முறையில் இருந்தால் அன்றைய நாள் ராகுல் பட்டையை கிளப்புவார். பும்ராவுக்கு எதிராக ஒரு முறை அவர் கவர் திசையில் அடித்த சிக்சர் ஷாட்டை நான் மறக்க மாட்டேன்.
சில சமயம் நாம் இவர் அதிரடியாக ஆட வேண்டும் என்று நினைப்போம். ஆனால் ராகுல் வேறு மாதிரி யோசிப்பார். தற்போது இருக்கும் டி20 அணியில் ராகுலின் கதை முடிந்துவிட்டது என்று நினைக்கின்றேன். ஏனென்றால் ஏற்கனவே அபிஷேக் ஷர்மா சஞ்சு சாம்சன்,ஜெய்ஸ்வால், கில் என வரிசையில் பலவீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் ராகுல் நடு வரிசையில் தான் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் நடுவரிசையும் தற்போது இடமே இல்லாமல் இருக்கின்றது. இதனால் டி20 அணியை பொறுத்தவரை ராகுலுக்கு வாய்ப்பு கிடையாது. ராகுல் டி20 கிரிக்கெட் பொறுத்தவரை அதிரடியாக விளையாட வேண்டும். எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.