துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் முதுகெலும்பாக இருக்கப் போவது கே.எல்.ராகுல் தான். ஆனால், அவரைத் தான் இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர். தற்போது ராகுல் பேட்டிங் வரிசையில் ஆறாம் வரிசையில் தான் களமிறங்கி வருகிறார்.
ஒரு காலத்தில் துவக்க வீரராக ஆடிக் கொண்டிருந்த கே.எல்.ராகுல் தற்போது அணியின் தேவைக்காக ஆறாம் வரிசையில் விளையாடி அதிலும் ரன் சேர்த்து வருகிறார். இதுவரை 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மூன்று இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 106 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அதில் இரண்டு முறை நாட் அவுட் ஆக இருந்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 96.36 என்பதாக உள்ளது. மிகவும் மந்தமான துபாய் ஆடுகளத்தில் இது நல்ல ஸ்ட்ரைக் ரேட் தான்.

மேலும் இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்த பிறகு தான் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்ய வருவார். அப்போது இன்னும் ஒரு விக்கெட் விழுந்தாலும் இந்திய அணியின் ரன் குவிப்பு வேகம் மற்றும் பேட்டிங் மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என்று இக்கட்டான சூழ்நிலையில் தான் அவர் பேட்டிங் செய்து வருகிறார். அப்படியும் அவர் ரன்கள் சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை கே.எல்.ராகுல் இந்திய அணிக்காக மிகச்சிறந்த செயல்பாட்டை அளித்திருக்கிறார். ஒரு நாள் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர் மிகச்சிறந்த பேட்டிங் சராசரி வைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 58.8 என்பதாகும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 106.52 என்பதாகும்.
மேலும் அவர் ஒரு நாள் போட்டிகளில் துவக்க வீரராக விளையாடும் போது 43.57 என்ற பேட்டிங் சராசரியையும், நான்காம் வரிசையில் ஆடும் போது 55.8 என்ற பேட்டிங் சராசரியையும், ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்யும்போது 56.48 என்ற பேட்டிங் சராசரியையும், ஆறாம் வரிசையில் பேட்டிங் செய்யும்போது 40 என்ற பேட்டிங் சராசரியையும் வைத்துள்ளார்.
அது மட்டும் இன்றி முக்கியமான சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் அவரது பேட்டிங் சராசரி வியக்கத்தக்க வகையில் உள்ளது. உலகக் கோப்பைகளில் அவரது பேட்டிங் சராசரி 58.07 என்பதாகும். ஆசியக் கோப்பையில் அவரது பேட்டிங் சராசரி 58 ஆகும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதன் முறையாக விளையாடி வரும் நிலையில் இதுவரை அவரது பேட்டிங் சராசரி 106 என்பதாக உள்ளது.
இத்தனை சிறப்பாக ஆடியும் அவரது பேட்டிங் சரியில்லை என்ற விமர்சனம் அவ்வப்போது எழுவது வேதனை அளிக்கும் விஷயமாகவும் உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கே.எல்.ராகுல் நிச்சயம் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கலாம்.