பெங்களூரு: ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆகஸ்ட் 18ஆம் தேதி நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் ஃபிட்னஸ் சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் 54 நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் தலைவலியாக மாறியுள்ளது. ஏனென்றால் நீண்ட காலமாக இந்திய அணியின் மிடில் ஆர்டரை தாங்கி பிடித்த கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் என்சிஏவில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இருவருமே அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் 4 மாதங்களுக்கும் மேலாக தங்கி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சில வாரங்களுக்கு முன் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளதாக வீடியோ பதிவிட்டிருந்தார். ஆனால் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், இருவரின் முடிவும் ஆசியக் கோப்பையின் போதே தெரிய வரும் என்று கூறி இருந்தார்.
இதனால் ஆசியக் கோப்பையில் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரும் இருவரும் விளையாடுவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோரை இந்திய அணி தயாராக வைத்துள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்களால் கூறப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் நம்பர் 4ல் சூர்யகுமார் யாதவ் சொதப்புவதால் ஃபினிஷர் ரோலில் களமிறக்கப்பட்டு சோதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேஎல் ராகுல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சில பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறார். இருப்பினும் கேஎல் ராகுலின் ஃபிட்னஸ் பற்றிய தகவல் வெளியாகவில்லை.
அதேபோல் இந்த வார இறுதியில் ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது. அதற்கு முன் ஆகஸ்ட் 18ஆம் தேதி கேஎல் ராகுலின் ஃபிட்னஸை சோதிக்க என்சிஏ-வுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை கேஎல் ராகுல் முழு ஃபிட்னஸை எட்ட முடியாத பட்சத்தில், அதற்கான மாற்று வழிகளையும் இந்திய அணி நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக தெரிய வந்துள்ளது.