மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பிளேயிங் லெவன் நடுவரிசையில் எந்த வீரர் இடம்பெறப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், பும்ரா சிராஜ் உள்ளிட்ட 16 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். மூன்றாவது வீரராக கில்லும்,விராட் கோலி நான்காவது வீரராகும் களமிறங்குவார்கள். ஆறாவது வீரராக விக்கெட் கீப்பர் பந்த் விளையாடுவார்.

இந்த நிலையில் ஐந்தாவது வீரர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகிய நிலையில் சர்ஃப்ராஸ் கான் தான் பிளேயிங் லெவனில் இடம் பெற்றார். அறிமுகமான முதல் தொடரிலே ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் எடுத்தார்.
இதை அடுத்து தர்மசாலாவில் நடைபெற்ற கடைசி டெஸ்டிலும் சர்பராஸ்கான் அரை சதம் அடித்தார். இதன் மூலம் சர்பராஸ்கான் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ள நிலையில் துலீப் கோப்பை தொடரில் இந்திய பி அணிக்கு சார்பாக விளையாடிய சர்பராஸ்கான் முதல் இன்னிங்ஸில் ஒன்பது ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்களும் எடுத்திருந்தார்.
இந்த சூழலில் பார்ம் படிப் பார்த்தால் சர்பராஸ் கானுக்கு தான் வாய்ப்பு வழங்க வேண்டும். ஆனால் சர்பராஸ் காணை விட கே.எல். ராகுல் அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கிறார். கே.எல் ராகுல் தன்னுடைய திறமையை ஏற்கனவே சர்வதேச அரங்கில் நிரூபித்திருக்கிறார்.இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 போட்டிகளில் விளையாடி 2863 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 34 என்ற அளவில் குறைந்து இருந்தாலும், 8 சதம், 14 அரை சதம் அடித்திருக்கிறார்.
இதனால் கே எல் ராகுல் மீண்டும் வாய்ப்பு கிடைத்து விளையாடினால் அவர் தன்னுடைய திறமையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கே.எல் ராகுல் பெரும்பான்மையாக தொடக்க வீரராக களமிறங்குவார். தற்போது அவருக்கு நடு வரிசையில் வாய்ப்பு வழங்கினால், அதை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
துலீப் கோப்பையில் கூட 37 மற்றும் 57 ரன்கள் அடித்திருந்தார். இதனால் சர்பராஸ் கானை விட கேஎல் ராகுலுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்பராஸ் கான் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.