துபாய்: இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான கே.எல்.ராகுல் மிகப்பெரிய இதயம் உள்ளவர் என்பதை பலமுறை நாம் பார்த்திருக்கிறோம். இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர், போட்டிக்கு வெளியிலும் தான் மிகப்பெரிய இதயம் கொண்டவர் என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்பட்டார்.
அரையிறுதி போட்டி முடிந்தவுடன் ஒரு ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய கே.எல்.ராகுல், இறுதிப் போட்டி முடிந்தவுடனும் ஒரு சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைத்தார். அந்த காட்சிகளை பகிர்ந்து நெகிழ்ந்து வருகின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் பேட்டிங் இறங்க சொன்னாலும் மறுக்காமல் விளையாடுபவர் கே.எல்.ராகுல். தற்காலிக கேப்டன் பதவி கொடுத்தாலும் அதிலும் வெற்றிகளை குவிப்பார். தன்னுடன் விளையாடும் பேட்ஸ்மேன்கள் அரை சதம் அடிக்க வேண்டும், சதம் அடிக்க வேண்டும் என்பதில் அவர்களை விட அதிக அக்கறையுடன் செயல்படுவார்.
இப்படி ஆடுகளத்தில் பெரிய இதயத்துடன் இருக்கும் கே.எல்.ராகுல் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய பிறகு, அத்துமீறி வந்த ரசிகரை கட்டி அணைத்து அமைதிப்படுத்தினார். அந்த ரசிகர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண்ணீருடன் கே.எல்.ராகுலை கட்டி அணைத்து இந்திய அணியின் வெற்றியை கொண்டாடினார்.
அப்போது அவரை துரத்தி விடாமல் அல்லது அவரிடம் இருந்து விலகாமல் அந்த ரசிகரை கட்டி அணைத்தார் கே.எல்.ராகுல். அப்போது பலரும் அதை சுட்டிக்காட்டி ராகுலை பாராட்டினர். தற்போது இறுதிப் போட்டியிலும் இந்திய வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கே.எல்.ராகுல் நெகிழ்ச்சியளிக்கும் வகையில் ஒரு விஷயத்தை செய்தார்.
போட்டி முடிந்தவுடன் களத்தில் இருந்து கே.எல்.ராகுல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு நடுவே ஓய்வறையை நோக்கி சென்றார். அப்போது மைதானத்தில் பார்வையாளர் பகுதியில் மேலே நின்று இருந்த ஒரு சிறுவன் கே.எல்.ராகுலை அழைத்து அவரது கிளவுஸை தனக்கு அளிக்குமாறு கேட்டான்.
சற்றும் யோசிக்காமல் உடனடியாக கிளவுஸை அவிழ்த்து அந்த சிறுவனை நோக்கி வீசினார் கே.எல்.ராகுல். அந்த சிறுவன் மகிழ்ச்சியில் மிதந்தான். இந்த சம்பவம் நெகிழ்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. களத்தில் சக வீரர்களுக்காக தியாகம் செய்பவராக இருக்கும் ராகுல், ஆடுகளத்துக்கு வெளியே ரசிகர்களின் சிறு, சிறு ஆசைகளையும் பூர்த்தி செய்யும் வீரராக இருக்கிறார். இதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.