சென்னை: டோணியுடன் மோதுவது ஒருபக்கம் இருக்கட்டும். வங்கதேசத்தில் போய் விராத் கோஹ்லி என்ன செய்தார்.. ஒரு வீரராக, ஒரு சீனியராக அவர் அணிக்கு என்ன பங்களித்தார் என்று பார்த்தால் பெரிய திருப்பதி லட்டைத்தான் ரசிகர்களுக்கும், அணிக்கும் அவர் கொடுத்துள்ளார்.
ஒரு முழுமையான டெஸ்ட் கேப்டனாக வங்கதேசத்தில் களம் புகுந்தார் கோஹ்லி. ஒரே ஒரு டெஸ்ட் போட்டிதான். அப்போட்டியில் விராத் கோஹ்லி பின்னிப் பெடலெடுக்கப் போகிறார். பிரித்து மேயப் போகிறார் என்றெல்லாம் எதிர் பார்த்தனார். ஆனால் அவர் புல்லைக் கூட பிரித்து மேயவில்லை.

மாறாக 22 பந்துகளைச் சந்தித்து வெறும் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போட்டி டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகனாக தேர்வானவர் ஷிகர் தவான்.
அடுத்து ஒரு நாள் தொடர். கேப்டன் கோஹ்லி, இப்போது துணை கேப்டனாக களம் புகுந்தார். டோணி கேப்டன். ஒரு நாள் தொடரிலும் அவர் சாதிக்கவில்லை.
முதல் போட்டியில் அவர் எடுத்த ரன்கள் வெறும் ஒரு ரன்தான். 4 பந்துகளைச் சந்தித்து ஒரு ரன் மட்டும் எடுத்து விட்டுப் போய் விட்டார் கோஹ்லி.
அடுத்த போட்டியிலும் சொதப்பல்தான். 27 பந்துகளைச் சந்தித்தார். 23 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இன்று அதை விட மோசம். 35 பந்துகளைச் சந்தித்து 25 ரன்களை எடுத்தார்.
இதுதான் விராத் கோஹ்லி இந்திய அணிக்கு வங்கதேச டூரில் செய்த பங்களிப்பு..!