டெல்லி: இலங்கைக்கு எதிராக நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஒரு மாதம் ரெஸ்ட் அளிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருதினப் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட வந்துள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

இந்தத் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி, தென்னாப்பிரிக்கா செல்கிறது. கடந்த, இரண்டு ஆண்டுகளாக மிகச் சிறப்பாக வெற்றிகளைப் பதிவு செய்து வரும் இந்திய அணிக்கு, தென்னாப்பிரிக்கா தொடர் மிகவும் முக்கியமானது.
3 டெஸ்ட்கள், 6 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. இந்திய அணியின் திறமையை சோதிக்கும் களமாக தென்னாப்பிரிக்கா இருக்கப் போகிறது.
கடந்த பல மாதங்களாக தொடர்ந்து விளையாடி வரும் கோஹ்லி, ஓய்வே இல்லை என்று கூறி வருகிறார். ஏற்கனவே, ஒரு மாசம் லீவு கேட்டிருந்தார். அதனால், இலங்கைக்கு எதிராக டில்லியில் நடக்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு கோஹ்லிக்கு ஓய்வு கொடுத்தால், அஜிங்கா ரஹானே தலைமையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா களமிறங்கும். ஒருதினம் மற்றும் டி-20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார்.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி, ஒருதினப் போட்டி மற்றும் டி-20 போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வு இன்று நடக்க உள்ளது. இதைத் தவிர தென்னாப்பிரிக்க தொடருக்கான அணியும் அறிவிக்கப்படலாம்.