இந்தூர்: அஸ்வின் மீது கடுப்பை காட்டியுள்ளார் மற்றொரு பிரபல ஆப்-ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்.
நியூசிலாந்துக்கு எதிரான இந்தூர் டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக பிட்சை பற்றிய விமர்சனம் ஒன்றை டிவிட்டரில் தெரிவித்தார் ஹர்பஜன் சிங்.
ஒரு பந்து கூட இன்னும் வீசப்படவில்லை, ஆனால் இரண்டு நாள் பிட்ச் போல காட்சியளிக்கிறது. என்னுடைய கணிப்புப்படி மூன்றரை நாட்களைத் தாண்டி மேட்ச் செல்லாது.. என விமர்சித்திருந்தார் ஹர்பஜன்.

ஒரு ரசிகர் " 2004 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த ஒன்றரை நாள் டெஸ்ட் போட்டியையும், 2008 தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியும் நினைவு கூர்ந்து அப்போதெல்லாம் நீங்கள் இப்படி புகார் சொல்லவில்லையே என கேள்வி எழுப்பியிருந்தார். ஏனெனில் அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஹர்பஜன் அபாரமாக பந்து வீசி எதிரணியை திக்குமுக்காடச் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஹர்பஜன், இப்போதைய பிட்ச்கள் போல இருந்தால், நானும், கும்ளேவும் இன்னும் நிறைய விக்கெட்களை வீழ்த்தியிருப்போம் என டிவிட் செய்தார். அஸ்வினை எல்லோரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வரும் நிலையில், இப்போதுள்ள பிட்ச்தான் பக்கபலமாக இருப்பதாக ஹர்பஜன் கூறியது அஸ்வினை பார்த்துதான் என்பது நெட்டிசன்களின் கோபத்திற்கு காரணமானது.
அஷ்வின் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க ஆரம்பித்த பிறகு இந்தியா எட்டு டெஸ்ட் தொடரில் வென்றிருக்கிறது. இதில் ஏழு முறை தொடர் நாயகன் அஷ்வின் தான். மேலும், நியூசிலாந்திலும் திறமையான ஸ்பின்னர்கள் உள்ளனர். ஆனால் அவர்களால் சாதிக்க முடியாததை அஸ்வின் சாதித்தார். மூன்றே டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் அஸ்வின்.
இதற்கு மேலும் ஹர்பஜனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது என்ற நிலையில் அவர் இவ்வாறு வெறுப்பை உமிழ்ந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஹர்பஜன் கமெண்ட் குறித்து அணி தலைவர் கோஹ்லியிடம் நிருபர்கள் கேட்டபோது அவரும் கோபப்படவே செய்தார்.
சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் என்றாலும் கூட ஒழுங்காக பந்து வீசினால் மட்டும் தான் விக்கெட்டுகள் கைப்பற்ற முடியும். இந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க இந்தியா திணறியதாக பலரும் கருத்து தெரிவித்தார்கள். இந்தியா அந்த போட்டியில் தோற்றது. அப்போது நியூசிலாந்து அணியில் இருந்த அதே பவுலர்கள் இப்போதைய டெஸ்ட் தொடரிலும் இருக்கிறார்கள். இப்போது ஏன் அப்படி பந்து வீசவில்லை?
எந்த பிட்ச்சாக இருந்தாலும் ஒழுங்காக பந்து வீசினால் தான் விக்கெட் கிடைக்கும், அதற்கு பின்னர் கடுமையான உழைப்பு இருக்கிறது. எங்களது முழு உழைப்பையும் கொட்டி தான் இரண்டு டெஸ்ட் போட்டிகளை நான்கு நாளில் முடித்திருக்கிறோம் என்றார் கோஹ்லி.
இதேபோல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஹர்பஜனின் வயிற்றெரிச்சலை கண்டித்துள்ளனர்.