
நல்ல பார்ட்னர்ஷிப்
இந்நிலையில் நேற்று 3வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடந்தது. அதில் 271 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய இந்தியாவின் தொடக்க வீரர் தவான் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும், ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர்.

ரோகித் அவுட்
ரோகித் 65 ரன்களில் இந்தியாவின் 2வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 23.1 ஓவர்களில் 113 ரன்களை எடுத்திருந்தது. அப்போது, ரஹானேவை முந்திக்கொண்டு டோணி களமிறங்கினார். ஆனால் அதன்பிறகுதான் ஆட்டம் தென் ஆப்பிரிக்கா கைக்கு மாறியது.

ஏப்பம் விட்ட டோணி
டோணி களமிறங்கிய முதல் சில பந்துகளில் நம்பிக்கையோடு அடித்து ஆடினார். ஆனால், அதன்பிறகு அடித்த பந்துகள் எல்லாம் ஃபீல்டர்கள் கைகளில் தஞ்சமடைந்தது. இதனால் பந்துகளை ஏப்பம் விட்டு கடைசியில் 61 பந்துகளில் 47 ரன் எடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் கோஹ்லியும் பந்துகளை சாப்பிட்டதால் ரன் ரேட் கையை மீறி போகத்தொடங்கியிருந்தது.

வரிசையாக நடை
கோஹ்லி 99 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அடிக்க வேண்டிய கட்டத்தில் ஆட்டமிழந்தார். ரஹானே டெக்னிக் பேட்ஸ்மேனே தவிர, அதிரடி வீரர் கிடையாது. எனவே டோணிக்கு பதிலாக கடைசியில் இறங்கிய அவரால் அடித்து ஆட முடியவில்லை. 4 ரன்களில் நடையை கட்டினார். இத்தொடரில் தொடர்ந்து சொதப்பும், ரெய்னாவும், டக்அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.

கேப்டன்-துணை கேப்டன்
ஆனால் டோணி-விராட் கோஹ்லி பார்ட்னர்ஷிப்பின்போதுதான் பந்துகள் அதிகம் விழுங்கப்பட்டன. இதுதான் பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு பதற்றத்தை உருவாக்கியது. பந்துகளை விழுங்கிய இவ்விருவரில் ஒருவர் கூட கடைசிவரை களத்தில் நிற்கவும் தவறிவிட்டனர்.

விக்கெட் இருந்தும் ஏன்?
நல்ல பார்மில் இருந்த டோணி, அடுத்த போட்டியிலேயே சொதப்பியுள்ளார். அதேநேரம், தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங்கை குறை சொல்ல முடியாது. அதும் பந்துகளை விழுங்க வைக்க காரணம். ஆனால் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்தியா 252 ரன்களை எடுத்தது. விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில், முதலில் இருந்தே அடித்து ஆடியிருக்க வேண்டும் என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.

அடேங்கப்பா
கோஹ்லி-டோணி பார்ட்னர்ஷிப் மொத்தம் 112 பந்துகளை சந்தித்தது. அதில் 59 பந்துகளில் சிங்கிள் ரன்கூட வரவில்லை. இதுதான் போட்டியை முற்றிலுமாக மாற்றிப்போட்டது. சர்வதேச அளவில் பிரபலமான இவ்விரு வீரர்களும் இணைந்து சொதப்பியது கண்கூடாக தெரிந்தது.


Click it and Unblock the Notifications











