டெல்லி: நான் துரோணாச்சாரியா விருது பெறும்போது, எனது அர்ஜுனன் விராட் கோஹ்லி அதை நேரில் பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார், கோஹ்லியின், பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா.
10 வயது முதல் கோஹ்லிக்கு பயிற்சியாளராக இருப்பவர் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் ராஜ்குமார் ஷர்மா. அவருக்கு நேற்று துரோணாச்சாரியா விருதை மத்திய அரசு அறிவித்தது.

முன்பும் பலமுறை, துரோணாச்சாரியா (சிறந்த பயிற்சியாளர்) விருதுக்கு அவர் பெயரை பரிந்துரை செய்தும், இந்த முறை அதிருஷ்டம் அடித்துள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு 51 வயதாகும், ராஜ்குமார் ஷர்மா அளித்த பேட்டியில், "10 வயதாக இருந்தபோது கோஹ்லி என்னிடம் பயிற்சி பெற வந்தார். இன்னமும் அது நினைவில் உள்ளது.
இப்போது அவர் வலை பயிற்சிக்கு வரும்போதும், எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. சிறு வயதில் நான் பார்த்த அதே கோஹ்லிதான் எனது கண்களுக்கு தெரிகிறது.
பெற்றோரோ, பயிற்சியாளரோ இருவருமே தங்களது பிள்ளைகள் அல்லது மாணவர்கள் வளர்ச்சியில் எப்போதுமே கவனம் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
2013ல் கோஹ்லி அர்ஜுனா விருது பெற்றபோது, ராஷ்ரபதி பவனில் நடந்த விழாவில் நானும் பங்கேற்றேன். அப்போது, நீங்கள் துரோணாச்சாரியா விருது பெற வேண்டும். அதை நான் பார்க்க வேண்டும் என கோஹ்லி ஆசை வெளிப்படுத்தினார்.
வரும் 29ம் தேதி நான் விருது பெறும்போது, கோஹ்லி வேறு பணியில் மூழ்கியிருக்காமல் இருக்க வேண்டும், நான் விருது வாங்குவதை பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை. இவ்வாறு பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா தெரிவித்தார்.