For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தென் ஆப்பிரிக்காவை திணற, திணற 'இரக்கமின்றி' வேட்டையாடிய கோஹ்லி!

By Veera Kumar

மொகாலி: அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டிருந்த இந்திய அணிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வெற்றி முதலாவது டெஸ்ட் போட்டியில் கிடைத்துள்ளது. அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, இந்த டெஸ்ட் போட்டியை 108 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ஒருநாள் தொடரில் டோணி அணி பெற்ற தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டுள்ளது.

டெஸ்ட் அணிக்கான கேப்டனாக கோஹ்லி அறிவிக்கப்பட்ட பிறகு, சொந்த மண்ணில் நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் இது. அதன் முதல் போட்டியிலேயே, உலகின் நம்பர்-1 டெஸ்ட் அணியான தென் ஆப்பிரிக்காவை, இந்தியா வென்று காட்டியுள்ளது.

டோணியின் கேப்டன்ஷிப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது கோஹ்லியின் மூவ்கள். எதிரணிக்கு சற்றும் இரக்கமே காட்டாமல் ஆரம்பம் முதல் முடிவுவரை ஆதிக்கம் செலுத்தும் நோக்கமே கோஹ்லியின் செயல்பாட்டில் தெரிந்தது.

ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி அடிக்கடி சொல்லும், 'ஆக்ரோஷம்' கோஹ்லி செயல்பாட்டில் அப்பட்டமாய் தெரிந்தது. பேட்டிங்கிற்கு சாதகமில்லாமல் மாற்றப்பட்ட மொகாலி பிட்சில் எந்த மாதிரி நடந்துகொள்ள வேண்டும் என்ற திட்டம் கோஹ்லி கைவசம் இருந்தது.

சவாலுக்கு ரெடி

சவாலுக்கு ரெடி

முதல் இன்னிங்சில், இந்தியா வெறும், 201 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. சுழற்பந்து அபாரமாக எடுபடுவதே அதற்கு காரணம் என்பதை இந்திய அணி கண்டுணர்ந்தது. அடுத்ததாக பேட் செய்ய வந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஓவரை வீச அஸ்வினை அழைத்ததன் மூலம், "ஒரு பந்தைகூட வீண் செய்யவிரும்பவில்லை. சவாலுக்கு நாங்கள் ரெடி" என்ற சமிக்ஞையை எதிரணிக்கு கொடுத்தார் கோஹ்லி.

சவால் பரிசு

சவால் பரிசு

அஸ்வின்தான் எங்களுக்கு சவாலாக இருப்பார் என்று தென் ஆப்பிரிக்க முன்னணி பேட்ஸ்மேன்கள் கூறிவந்த நிலையில், அந்த சவாலை முதல் பந்திலேயே அவர்களுக்கு பரிசாக கொடுத்தார் கோஹ்லி. எதிர்பார்த்ததை போலவே, முதல் ஸ்பெல் முதலே அஸ்வின் கை ஓங்கியது.

ஸ்பின் ஆதிக்கம்

ஸ்பின் ஆதிக்கம்

வேகப்பந்துக்கு உதவாத அந்த பிட்சில், ஒருவேளை, வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவையோ, ஆரோனையோ முதல் ஸ்பெல்லை வீச செய்திருந்தால், தென் ஆப்பிரிக்காவின் பக்கம் போட்டி சாய்ந்திருக்கலாம். வழக்கமாக ஒரு கேப்டன் புதுப்பந்தை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொடுப்பதுதான் சம்பிரதாயம். ஆனால் ஸ்பின் கை ஓங்கியதால், முதல் இன்னிங்சில் 17 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா.

இந்தியா முன்னிலை

இந்தியா முன்னிலை

2வது இன்னிங்சில் இந்தியா பேட் செய்தபோது, புஜாராவுடன் கம்பெனி அளித்து, ரன்னை சேகரிக்க உதவிய கோஹ்லி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் பிட்சில் நிற்குமாறு, விருதிமான்சாஹாவுக்கு அறிவுரை கூறினார். சாஹாவும் 20 ரன்கள் எடுத்ததன் விளைவாக இந்தியா 200 ரன்கள் எடுக்க முடிந்தது. 218 ரன்களை இலக்காக கொண்டு ஆடி வந்தது தென் ஆப்பிரிக்கா.

டோணி வேறுமாதிரி

டோணி வேறுமாதிரி

இப்போதும், முதல் ஓவர் அஸ்வினுக்குதான். இரண்டாவது ஓவர், மற்றொரு ஸ்பின்னரான ஜடேஜாவுக்கு. மாறிமாறி இவர்களையே வீச வைத்தார் கோஹ்லி. பொதுவாக டோணி இதுபோன்ற நேரங்களில் முதலில் வேகப்பந்து வீச்சு, 15 ஓவர்களுக்கு பிறகு ஸ்பின்னர் என்ற நடைமுறையைத்தான் கையாளுவார். கடைசியில் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் டோணி பொறுத்திருப்பார். ஆனால், முதல் பந்து முதலே, எதிரணியை மூச்சு முட்ட திணறடிக்க வேண்டும் என்ற நோக்கம் கோஹ்லியின் செயல்பாட்டில் இருந்தது.

ஒவ்வொரு பந்திலும் விக்கெட்

ஒவ்வொரு பந்திலும் விக்கெட்

விக்கெட், விக்கெட், எனக்கு தேவை ஒவ்வொரு பந்திலும் விக்கெட்... என்பதுதான் கோஹ்லியின் கேம் பிளானாக இருந்தது. நேரத்தை வீண் செய்வதை கோஹ்லி விரும்பவில்லை. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஆரம்பித்த தென் ஆப்பிரிக்க பேட்டிங், தேனீர் இடைவேளைக்கு பிறகு முழுமையாக காலியாக, கோஹ்லியின் பங்கு ஆபாரமானது.

பவுலிங் மாற்றம்

பவுலிங் மாற்றம்

தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் களமிறங்கியபோது, அஸ்வினையும், ஜடேஜாவையும், நிலைகுலையச் செய்ய களத்தைவிட்டு இறங்கி வந்து ஆடத்தொடங்கினார். ஒரு நபராக இருந்து மேட்சை திசை திருப்பும் வல்லமை கொண்டவர் டிவில்லியர்ஸ் என்பதை உணர்ந்த கோஹ்லி, உடனடியாக பவுலிங்கை மாற்றினார். அதுவரை பந்து வீசாமல் இருந்த அமித் மிஸ்ராவை டிவில்லியர்ஸ் நிற்கும்போது பந்து வீச அழைத்தார்.

அமித் மிஸ்ரா கலக்கல்

அமித் மிஸ்ரா கலக்கல்

முதல் இன்னிங்சில் மிஸ்ரா பந்தில்தான் டிவில்லியர்ஸ் அவுட் ஆனதால் உளவியல் ரீதியாக நெருக்கடி தர மிஸ்ராவை அழைத்து வந்தார் கோஹ்லி. இப்போதும் கோஹ்லிக்கு வெற்றி. முதல் இன்னிங்சை போலவே, இப்போதும் மிஸ்ரா பந்தில் டிவில்லியர்ஸ் கிளீன் பௌல்ட். 16 ரன்களிலேயே வெளியேற்றப்பட்டார் டிவில்லியர்ஸ்.

பார்ட்னர்ஷிப் தப்பாச்சே..

பார்ட்னர்ஷிப் தப்பாச்சே..

32 ரன்களுக்கே 4 விக்கெட்டை இழந்தது தென் ஆப்பிரிக்கா. அப்படியும் திருப்தியடையவில்லை கோஹ்லி. எல்கர், டேன்வில்ஸ் நடுவே சிறிது பார்ட்னர்ஷிப் உருவானதை கவனித்த கோஹ்லி, 16வது ஓவரில் ஆரோனை பந்து வீச அழைத்தார். அவ்வளவு நேரம், இரு முனைகளிலும் சுழலை சந்தித்த எல்கர், மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பந்து வீசிய ஆரோனை எதிர்கொள்ள தயாராகாமல் மோசமான முறையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இரக்கமில்லா தாக்குதல்

இரக்கமில்லா தாக்குதல்

அதன்பிறகு ஆரோன் பந்தில் விக்கெட் விழாததால் மீண்டும் உடனே ஸ்பின்னை இருமுனைகளிலும்விட்டு தாக்கினார் கோஹ்லி. ஆகமொத்தம், ஆரோனும், யாதவும் சேர்ந்து தலா 3 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. மற்ற ஓவர்களை ஸ்பின்னர்கள் பார்த்துக்கொண்டனர். ஒரு நிமிடம் கூட எதிரணியை தலைதூக்க விடாமல், இரக்கமேயில்லாமல், அவர்களுக்கு எதிராக கடும் தாக்குதலை நடத்தினார் கோஹ்லி என்றால் அதுமிகையில்லை.

Story first published: Saturday, November 7, 2015, 17:27 [IST]
Other articles published on Nov 7, 2015
English summary
Kohli never given time to South Africa to bounce back in the first test.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+