மொஹாலி: தல - தளபதி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் டோணியும், விராத் கோஹ்லியும் சேர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு செமத்தியான ஆட்டம் காட்டினர். வழக்கம் போல வான வேடிக்கை காட்டி ஆஸ்திரேலியாவை தெறிக்க விட்டார் கோஹ்லி.
என்ன காமெடி என்றால் ஆடியது என்னவோ கோஹ்லிதான். உயிரைக் கொடுத்து கடைசி வரை வெளுத்து வாங்கினார் கோஹ்லி. ஆனால் கடைசியில் வெற்றிக்கான ரன்னை அடித்தது தல டோணி. அந்த வகையில் டோணி ரசிகர்களுக்கு செம குஷியாகி விட்டது.

முன்னணி வீரர்களான ஷிகர் தவான், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் விரைவிலேயே ஆட்டமிழக்க இந்தியா நெருக்கடியில் மூழ்கியது. இந்த நிலையில் யுவராஜுடன் சேர்ந்து ஓரளவு ஸ்திரப்படுத்திய கோஹ்லி, டோணி வந்த பிறகு ரொம்ப சவுகரியமாக ஆடத் தொடங்கினார்.
டோணியும், கோஹ்லிக்கு செம சப்போர்ட்டிவாக இருந்தார். கோஹ்லி ஒரு பக்கம் ஆட, டோணி மறுபக்கம் சப்போர்ட்டாக இருக்க.. ஆட்டம் களை கட்டியது.
ஆரம்பத்தில் நிதானம் காட்டினார் கோஹ்லி. அதற்காக அவர் ரன் எடுக்காமல் இல்லை. ஓடி ஓடி சிங்கிள்ஸ்களாகவும், டபுளாகவும் எடுத்துக் கொண்டிருந்தார். ஓவர்கள் குறையக் குறைய அவர் அதிரடிக்கு மாறினார்.
ஆஸ்திரேலியாவின் பந்து விச்சை வெளுத்தெடுத்தார். குறிப்பாக பால்க்னரை கடுமையாக தண்டித்தார். அவரது ஆவேச ஆட்டத்தைப் பார்த்து மொஹாலி மொத்தமும் கோஹ்லி கோஹில என கூச்சலிட ஆரம்பித்தது.
நேற்றைய போட்டியில் டோணி நிதானம் காட்டினார். கோஹ்லி வேகம் காட்டினார். இருவரும் சேர்ந்து போட்டியை பிரமாதக முடித்து வைத்தனர். கோஹ்லி ரத்தம் சிந்தி இந்தியாவை வெற்றிக்குப் பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்திய நிலையில் வெற்றிக்குத் தேவையான கடைசி நான்கு ரன்களை டோணி அடித்து தான் ஒரு பினிஷிங் குமார் என்பதை நிரூபித்ததுதான் செம மேட்டர்.
மொத்தத்தில் நேற்றைய ஆட்டம் அத்திப் பூ போல அபூர்வமானது, குறிஞ்சிப் பூ போல ஆச்சரியமானது!