மொஹாலி: மொஹாலி ஒரு நாள் போட்டியில் கேப்டன் டோணி ஒரு பக்கம் வெளுத்தார் என்றால் மறுபக்கம் துணை கேப்டன் விராத் கோஹ்லி 26வது சதத்தைப் போட்டு ரசிகர்களுக்கு டபுள் டிலைட்டைக் கொடுத்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் விரைவில் அவுட்டாகி வெளியேற பொறுப்பு கோஹ்லி மற்றும் டோணி தலைமை மீது விழுந்தது. இதை உணர்ந்து இருவரும் அபாரமாக ஆடி விக்கெட் வீழ்ச்சியை நிறுத்தினர்.

இருவரும் சரமாரியாக அடித்து நொறுக்கியதால் நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் சலித்துப் போய் விட்டனர். ஒரு வழியாக டோணி 80 ரன்களுடன் வெளியேற, விராத் கோஹ்லி தொடர்ந்து வெளுத்தெடுத்தார். கூடவே ஒரு சதத்தையும் போட்டு முடித்தார்.
கோஹ்லிக்கு இது ஒரு நாள் போட்டிகளில் 26வது சதமாகும். இன்றைய போட்டியில் கோஹ்லி இன்னொரு மைல்கல்லையும் எட்டினார். அது இந்தியாவில் அவர் 3000 ரன்களைத் தாண்டினார். இந்த ஆண்டு முழுவதும் கோஹ்லி சிறப்பாக ஆடி வருகிறார். உலகக் கோப்பை டி20 போட்டியில் முதலில் அசத்தினார். பின்னர் ஐபிஎல் போட்டிகளில் பட்டையைக் கிளப்பினார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து ரன் குவிததார். தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும் அசத்தி வருகிறார்.
முதல் ஒரு நாள் போட்டியில் அரை சதம் போட்டிருந்தார் கோஹ்லி. இந்த நிலையில் 3வது போட்டியில் அவர் சதம் போட்டு அசத்தி விட்டார்.
104 பந்துகளில் கோஹ்லி சதம் போட்டார். அதில் 10 பவுண்டரிகளும் அடக்கம்.