ஹைதராபாத்: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடுவதற்காக ஹைதராபாத் சென்ற விராட் கோஹ்லி தலமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிச்சி உதறிய வீடியோ ஹிட்டாகியுள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடக்கிறது. இதில் ஹைதராபாத்தில் நேற்று இரவு நடந்த சீசனின் 39வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 146 ரன்கள் மட்டும் எடுத்தது. அதே நேரத்தில் பெங்களூர் அணியை 141 ரன்களுக்கு சுருட்டி, 5 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வென்றது.
போட்டிக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை, பெங்களூர் வீரர் முகமது சிராக்கின் வீட்டுக்கு இரவு விருந்துக்கு கோஹ்லி மற்றும் வீரர்கள் சென்றனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சிராக்கின் வீட்டில் காரசாரமான ஹைதராபாதி பிரியாணியை அவர்கள் பிச்சி உதறிய வீடியோ மற்றும் படங்களை சிராக் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஹிட்டாகி உள்ளது.
இந்த சந்திப்பை மறக்க முடியாது என்று சிராக் கூறியுள்ளார். கோஹ்லி அண்ட் கோ, கண்ணீர் தளும்ப காரசாரமான பிரியாணியின் ருசி குறித்து பேசி வருகின்றனர்.