11 வருஷம்..! அந்த ஆக. 18, உலக சாதனை படைத்த கிங் கோலி.. கிடைத்த வித்தியாசமான பாராட்டு..! சபாஷ்.!!
டெல்லி: இந்திய கேப்டன் கோலியின் சாதனையை கவுரவிக்கும் வகையில் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தின் ஒரு ஸ்டாண்டுக்கு கோலி பெயர் சூட்டப் படுகிறது.
கிரிக்கெட் கேப்டன் கோலி, அனைத்து சாதனைகளையும் முறியடித்து, சர்வதேச ஒருநாள் அரங்கில் ஜாம்பவான் சச்சினின் சாதனைகளை நெருங்கி வருகிறார். சமீபத்தில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 சதங்கள் விளாசினார்.
10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற புது உலக சாதனையும் படைத்தார் கோலி. இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்டில் பங்கேற்க இருக்கிறது.

கோலிக்கு கவுரவம்
இந் நிலையில், டெல்லியை சேர்ந்தவரான விராட் கோலியின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில், டெல்லியில் உள்ள கிரிக்கெட் மைதானமான பெரோஷா கோட்லாவின் ஒரு ஸ்டாண்டுக்கு விராட் கோலி பெயர் வைக்கப்படுகிறது.

ஆக.18ல் அறிமுகம்
2008ம் ஆண்டு, ஆகஸ்ட் 18ம் தேதியன்று இலங்கைக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் கோலி அறிமுகமானார். அதனை நினைவுபடுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 பேர்
கோலியை போன்றே முன்னாள் 2 டெல்லி வீரர்களான பிஷன் சிங் பெடி, மொகிந்தர் அமர்நாத் ஆகியோரின் பெயர்களில் ஸ்டாண்டுகள் உள்ளன. ஆனால் அவர்களின் ஓய்வுக்கு பின்தான் இத்தகைய கவுரவத்தை பெற்றனர்.

அதிரடி மன்னன் சேவாக்
ஆனால் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கும் போதே அந்த கவுரவத்தை பெறும் நபராகிறார். முன்னாள் அதிரடி மன்னன் சேவக், அஞ்சும் சோப்ரா ஆகியோரின் பெயர்களில் கோட்லா மைதானத்தில் கேட்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications