மும்பை : கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.
குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாட்டில் உள்ள பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக வளர வேண்டும் என்றால் அதற்கு ஆண் குழந்தைகள் சரியாக இருக்க வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவதை தடுப்பதற்கு பெண்களை வீட்டை விட்டு செல்லக்கூடாது என்று சொல்வது வழி அல்ல என்றும் அதற்கு ஆண் குழந்தைகள் சரியாக வளர்க்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொல்கத்தா பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சூரிய குமார் யாதவ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், உங்கள் பெண் குழந்தைகளை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று வாக்கியத்தை அடித்து விட்டு முதலில் உங்கள் ஆண் குழந்தைகளை பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை குறித்து கற்றுக் கொடுங்கள்.
அதைப்போல் உங்கள் சகோதரர்களிடமும், உங்கள் தந்தைகளிடமும், உங்கள் கணவரிடமும் உங்கள் நண்பர்களிடமும் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி சொல்லிக் கொடுங்கள் என்று சூரியகுமார் யாதவ் பதிவிட்டு இருக்கிறார். அதாவது பெண்களை எப்படி ஆடை உடுத்த வேண்டும். பெண்கள் வீட்டை விட்டு செல்லக்கூடாது போன்ற கருத்துக்களை பேசாமல் பெண்களை தெய்வமாக மதிக்க ஆண் பிள்ளைகளிடம் கற்றுக் கொடுங்கள் என்ற கருத்தையே சூரியகுமார் யாதவ் சூசகமாக தெரிவித்து இருக்கிறார்.