
ட்ரேடிங் வசதி
தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னதாக அணிகளுக்கு ஒரு ஸ்பெஷல் வசதி கொடுக்கப்படும். அதாவது மற்ற அணிகளுடன் பேச்சுவார்த்தை செய்து வீரர்களை ட்ரேடிங் மூலம் மாற்றிக்கொள்ளலாம். அந்தவகையில் 3 அட்டகாசமான வீரர்களை கொல்கத்தா அணி முன்கூட்டியே ட்ரேடிங் செய்திருக்கிறது.

முதல் வீரர்
இதில் முதல் வீரர் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் தான். டெல்லி அணிக்கு அமான் கானை கொடுத்துவிட்டு, ஷர்துலை வாங்கியுள்ளது கொல்கத்தா அணி. சென்னை அணியில் தோனியுடன் மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்த ஷர்துலை, பல போராட்டத்திற்கு பிறகு ரூ.10.75 கோடிக்கு டெல்லி வாங்கியது. அதன்படி அந்த அணிக்காக கடந்தாண்டு 14 போட்டிகளில் 15 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். 120 ரன்களையும் அடித்திருந்தார்.

சிஎஸ்கேவின் திட்டம்
ஷர்துல் தாக்கூர் விடுவிக்கப்பட்டால் ஏலத்தில் குறைந்த விலையில் எடுக்கலாம் என சிஎஸ்கே அணி திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. ஆனால் கொல்கத்தா அணி முந்திக்கொண்டு ட்ரேடிங்கில் தட்டித்தூக்கியிருக்கிறது. அந்த அணி இதே போல மேலும் 2 வீரர்களையும் ட்ரேடிங் மூலம் வாங்கியிருக்கிறது.

யார் அந்த 2 வீரர்கள்
கடந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியில் முக்கிய பங்காற்றிய லாக்கி ஃபெர்க்யூசன் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இரண்டு பேரையும் வாங்கியுள்ளது. கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் நியூசிலாந்து தொடரில் இணைந்து ஆடவுள்ளனர். டி20 உலகக்கோப்பை தொடரிலும் ரிசர்வ் வீரர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











