கொல்கத்தா: ஐ.பி.எல் தொடர் லீக் போட்டியில் பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 11வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாசில் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் பீல்டிங் தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்களான வோஹ்ரா (28), ஆம்லா (25) சுமாரான துவக்கம் அளித்தனர். பின்னர் வந்த ஸ்டோனிஸ் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஏமாற்றினார். இதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் மேக்ஸ்வெல் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 14 பந்தில் 3 பவுண்டரி 1 சிக்சர் என 25 ரன்கள் சேர்த்த போது உமேஷ் வேகத்தில் அவுட்டானார்.
உமேஷ் யாதவ் வேகத்தில் அடுத்து வந்த மில்லர் (28), சகா (25), பட்டேல் (0) என அடுத்தடுத்து சீட்டுகட்டு போல் சரிந்தனர். பின்னர் சர்மா(10), ஆரோன் (4) என அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய காம்பீர், நரேன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். பவர்ப்ளேயில் மட்டும் கொல்கத்தா அணி 72 ரன்களை குவித்தது. இதுவே பவர்ப்ளேவில் கொல்கத்தாவின் அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 5.4 வது ஓவரில் ஆரோன் வீசிய பந்தை தூக்கி அடித்த நரேன், அக்ஷர் படேலிடம் கேட்ச் ஆனார். அவர் 18 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 37 ரன்களை விளாசினார். பின்னர் கம்பீருடன் ஜோடி சேர்ந்த உத்தப்பா அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 16 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்சர் என 26 ரன்கள் அடித்த உத்தப்பா, அக்சர் படேல் பந்துவீச்சில் அவுட்டானார்.
இதனால் கொல்கத்தா அணி, 16.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மணீஷ் பாண்டே 16 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்சர்களுடன் 25 ரன்களுடனும், காம்பீர் 49 பந்துகளில் 11 பவுண்டரிகள் விளாசி 72 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.