திருநெல்வேலி: டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் நெல்லை அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோவை அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் கோவை அணியை எதிர்த்து நெல்லை அணி விளையாடியது. கடந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் கோவை அணி கோப்பையை பகிர்ந்துகொண்டது. இதனால் சோலோவாக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் டாஸ் வென்ற கோவை அணி கேப்டன் ஷாரூக் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் சுஜய் - சுரேஷ் குமார் கூட்டணி களமிறங்கியது. அதில் தொடக்க வீரர் சுஜய் 7 ரன்களிலும், தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் சச்சின் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதன்பின்னர் சுரேஷ் குமார் - முகிலேஷ் கூட்டணி சேர்ந்தது. இதன்பின்னர் அதிரடியாக ஆடிய இருவரும் ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியை விளாசி தள்ளினர். இதனால் சுரேஷ் குமார் 28 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். 12வது ஓவரிலேயே 100 ரன்களை கடந்த நிலையில் சிறப்பாக ஆடிய சுரேஷ் குமார் 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த கேப்டன் ஷாரூக் கான் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
பின்னர் வந்த அதீக் உர் ரஹ்மான் 15வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார். இதேபோல் ஒவ்வொரு ஓவருக்கும் அவர் பவுண்டரியாக விளாச, கோவை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அதேபோல் அதிரடியாக ஆடிய அதீக் ரஹ்மான் 20 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 50 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 18 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக கோவை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது.
இதனால் நெல்லை அணி வெற்றிபெற 206 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய நெல்லை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. நிரஞ்சன் ரன் ஏதும் எடுக்காமலும், நட்சத்திர வீரர் அஜிதேஷ் குருசாமி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 2 ரன்களுக்கு நெல்லை அணி 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் வீரர்களில் நிதிஷ் 13 ரன்களிலும், சூர்யபிரகாஷ் 22 ரன்களிலும் ஆட்டமிழக்க, கேப்டன் அருண் கார்த்திக் 27 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேற, மொத்தமாக 15 ஓவர்களில் 101 ரன்களுக்கு நெல்லை அணி ஆல் அவுட்டாகியது. கோவை அணி சார்பாக ஜதாவேத் சுப்ரமணியன் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ஷாரூக் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் கோவை அணி தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு பின் கோவை வீரர்கள் பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் சாதாரணமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.