பெங்களூரு: கர்நாடகா கிரிக்கெட் சங்கம் நடத்தும் கேஎபிஎல் 7வது சீசன் ஆகஸ்ட் 15ல் துவங்க உள்ளது. டிஎன்பிஎல்லில் வெளிமாநில வீரர்கள் விளையாடுவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. ஆனால், வெளிமாநில வீரர்களை களமிறக்கும் முயற்சியில் கேபிஎல் இறங்கியுள்ளது.
கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் கர்நாடகா பிரீமியர் லீக் டி-20 போட்டித் தொடரின் 7வது சீசன் ஆகஸ்ட் 15ல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, ஹூப்பள்ளி, மைசூருவில் போட்டிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் பங்கேற்ற வீரர்களில் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்க வைக்கலாம். மற்ற வீரர்களுக்கான ஏலம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெளிமாநிலங்களைச் சேர்ந்த வீரர்களையும் இதில் விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பிசிசிஐயிடம் கர்நாடகா கிரிக்கெட் சங்கம் கேட்டுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் டிஎன்பிஎல் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் வெளிமாநில வீரர்கள் விளையாடுவதற்கு சுப்ரீம் தடை விதித்தது. இந்த நிலையில், கேபிஎல்லுக்கு அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.