சென்னை: காயத்தில் இருந்து குணமடையாத கேஎல் ராகுலை ஆசியக் கோப்பைத் தொடருக்கு தேர்வு குழு தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்ரீகாந்த் விளாசியுள்ளார்.
சில நாட்களுக்கு ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார். இதனால் கேஎல் ராகுல் முழுமையாக குணமடைந்துவிட்டா என்று பார்க்கப்பட்ட நிலையில், கேஎல் ராகுல் இன்னும் முழு ஃபிட்னஸை எட்டவில்லை என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் என்சிஏ-வில் கேஎல் ராகுலுக்கு யோயோ டெஸ்ட் கூட வைக்கப்படவில்லை. ஆனாலும் முதல் போட்டிக்கு முன் தயாராகிவிடுவார், குரூப் போட்டிகளுக்கு பின் தயாராகிவிடுவார் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டதை தேர்வுக் குழு முன்னாள் தலைவரும், இந்திய அணி முன்னாள் வீரருமான ஸ்ரீகாந்த் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசுகையில், நான் தேர்வுக்குழு தலைவராக இருந்த போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்றது. அப்போது விவிஎஸ் லக்ஷ்மண் காயமடைந்தார். ஆனால் முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன் ஃபிட்னஸை எட்டிவிடுவேன் என்று கூறினார். இதனால் அவர் தேர்வு செய்துவிட்டு, ரோகித் சர்மாவை பேக் அப் வீரராக தேர்வு செய்தோம். ஆனால் அப்போது விவிஎஸ் லக்ஷ்மணும் ஃபிட்னஸை எட்டவில்லை. ரோகித் சர்மாவும் கால்பந்து விளையாடி காயமடைந்துவிடடர்.
இதனால் வேறு வழியில்லாமல் விருத்திமான் சாஹாவை பிளேயிங் லெவனில் சேர்த்தோம். தேர்வுக் குழுவை பொறுத்தவரை ஒரு வீரரை தேர்வு செய்யும் போது, அவர் முழு ஃபிட்னஸ் உடன் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். ஒருவேளை கேஎல் ராகுல் குரூப் போட்டிகளுக்கு பின்னரும் ஃபிட்னஸை எட்டவில்லை என்றால் என்ன செய்வீர்கள்.
கடந்த இரு ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லவே இல்லை. உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக நடக்கும் ஆசியக் கோப்பையில் கூட கோப்பையை வெல்ல முடியவில்லை என்றால், எப்படி உலகக்கோப்பை வெல்ல முடியும் என்று வெளுத்து வாங்கியுள்ளார்.