சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தமிழகத்தின் மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மேனுமான ஸ்ரீகாந்தின் மறுபக்கத்தை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். இந்திய அணிக்காக 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2062 ரன்கள் அடித்திருக்கின்றார்.
இதில் இரண்டு சதம், 12 அரை சதம் அடங்கும். அதேபோன்று 146 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 4091 ரன்கள் அடித்திருக்கின்றார். இதில் 4 சதம்,27 அரை சதம் அடங்கும். அதிரடியாக ஆடி எதிரணியின் பந்துவீச்சை சுக்குநூறாக்கும் பழக்கத்தை உடையவர் ஸ்ரீகாந்த்.

இந்திய தேர்வு குழு தலைவராகவும் ஸ்ரீகாந்த் பணி புரிந்திருக்கிறார். இவர் தேர்வு செய்த அணி தான் 2011 உலக கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்ரீகாந்த் கிரிக்கெட் வர்ணனையிலும் youtube சேனலையும் நடத்தி வருகிறார். ஸ்ரீகாந்த் எப்போதுமே தனக்கு ஜூனியர் வீரர்களை வாடா! போடா! அவன் இவன் என்று தான் பேசுவார்.
இது பல சர்ச்சையை ஏற்படுத்தினாலும், அது உரிமையுடன் சொல்லப்படும் வார்த்தையாக தான் இருக்கின்றது. அஸ்வின் இன்று உலகப் புகழ் பெற்றதற்கு ஸ்ரீகாந்த் தான் காரணம். அவர்தான் சிஎஸ்கே அணி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அஸ்வினை தேர்ந்தெடுங்கள் என்று கூறியிருந்தார். இப்படி பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை ஸ்ரீகாந்த் மாற்றி இருக்கிறார்.
ஆனால் ஸ்ரீகாந்துக்கு யாருக்குமே தெரியாத ஒரு மறுபக்கம் இருக்கின்றது. ஸ்ரீகாந்த் பேச்சை பார்த்தாலே அவர் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசும் நபர் என்று தெரிந்து கொள்ளலாம். மனது வெள்ளையாக இருந்தால் மட்டுமே மனிதர்களால் இப்படி பேச முடியும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஸ்ரீகாந்த் தான்.
ஸ்ரீகாந்த் தன் வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களை தனது நண்பர்கள் போல் நடத்துவாராம். ஸ்ரீகாந்த் ஊழியர்களின் மகன்கள் தற்போது வெளிநாட்டில் மிகப்பெரிய சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் ஸ்ரீகாந்த் சிறுவயதிலிருந்தே அவர்களின் பள்ளி, கல்லூரி செலவை ஏற்று அவர்களது குடும்பத்தை தூக்கி நிறுத்திருக்கின்றார்.
அது மட்டும் இல்லாமல் ஸ்ரீகாந்துக்கு சென்னையில் சொந்தமாக சில பெட்ரோல் பங்குகளும் உள்ளன. வெளியூரில் இருந்து சென்னையில் இது போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரின் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஸ்ரீகாந்த் பங்கில் பணிபுரிபவர்கள் ஏதோ நன்மை செய்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
காரணம் ஸ்ரீகாந்த் அனைத்து ஊழியர்களுக்கும் தங்கும் இடம், உணவு ஆகியவற்றை வழங்கி இருக்கின்றார். மேலும் வேலை கூடுதல் நேரம் எதுவும் கிடையாது. அப்படி இருந்தால் அதற்கான தனி சம்பளம் அனைத்தையும் வழங்கி இருக்கின்றார். இதுபோன்று பங்கில் வேலை பார்க்கும் ஊழியர்களின் குழந்தைகளின் கல்வி செலவை ஸ்ரீகாந்த் தான் ஏற்றி நடத்தி வருகின்றார்.
ஊழியர்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் அவர்களுக்கு பணம் கொடுத்து அனுப்புவாராம். ஒரு பெரிய கிரிக்கெட் வீரர், சமூகத்தில் பெரிய நிலையில் இருக்கும் நபர் என்று எல்லாம் பார்க்காமல் தோள்மேல் கை போட்டு சாதாரண ஊழியர்களை சொந்த குடும்பம் போல் நடத்தும் பழக்கத்தை உடையவராம் ஸ்ரீகாந்த். இது போன்று ஊழியர்களின் திருமணம், இல்லை குடும்பத்தில் ஏதேனும் நல்ல விஷயம், மருத்துவமனை செலவு என எது வந்தாலும் ஸ்ரீகாந்த் வழங்கி அவர்களை நன்றாக பார்த்துக் கொள்கிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள், மற்ற பங்க் ஊழியர்கள் போல் நாங்கள் இல்லை. நாங்கள் இங்கு மகிழ்ச்சியாக இருக்கின்றோம். அதற்கு காரணம் ஸ்ரீகாந்த் சார் தான். ஸ்ரீகாந்த் சார் எங்களை எல்லாம் அவருடைய குழந்தை போல் பார்த்துக் கொள்வார் என்று கூறி பெருமிதத்துடன் சொல்லி இருக்கிறார்கள்.