கங்குலி
சௌரவ் கங்குலி இந்திய அணி மோசமான காலகட்டத்தில் இருந்த போது கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2000 முதல் 2005 வரை இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். பல குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை இந்திய அணி பெற்றது.
தோனி
தோனி கேப்டனான போது இந்திய அணி டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தை பெற்றது. கங்குலியை விட அதிக வெற்றிகளை குவித்தார் தோனி. அந்த வகையில் அவரை சிறந்த கேப்டன் எனக் கூறினாலும், கங்குலி சிறந்த வீரர்களை உருவாக்கியவர் என பலரும் கூறி வருகின்றனர்.
வித்தியாசம்
இந்த நிலையில், கங்குலி - தோனி கேப்டன்சி குறித்து முன்னாள் இந்திய அணி கேப்டன் ஸ்ரீகாந்த் பேசினார். அவர் அனில் கும்ப்ளேவை வைத்து இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கூறினார். சொந்த மண்ணில் தோனி தான் சிறந்த கேப்டன் எனவும் கூறினார்.
கடினமான ஒப்பீடு
"இது மிக மிக கடினமான ஒப்பீடு. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2001 டெஸ்ட் தொடரில் கங்குலி அட்டகாசமாக செயல்பட்டார். தோல்வியில் இருந்து மீண்டு ஸ்டீவ் வாஹ் அணியை வீழ்த்தினார்." என கங்குலியின் சிறப்பான செயல்பாடு பற்றி கூறினார் ஸ்ரீகாந்த்.
தோனி தான்
"ஆனால், ஒட்டுமொத்தமாக சொந்த மண்ணில் நடந்த தொடர்களில் நீண்ட கால அடிப்படையில் யார் அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்? நிச்சயம் எம்எஸ் தோனி தான் என நினைக்கிறேன்." என்று கூறிய ஸ்ரீகாந்த், அதற்கான காரணத்தையும் கூறினார்.
அந்த வசதி
"கங்குலிக்கு ஒரே நேரத்தில் ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளேவை அணியில் ஆட வைக்கும் வாய்ப்பு இருந்தது. தோனிக்கு அந்த வசதி கிடைக்கவில்லை. இந்த நிலையில், சொந்த மண் ரெக்கார்டை எடுத்துப் பார்த்தால் நிச்சயம் தோனி தான் சிறப்பாக இருக்கிறார்" என்றார் ஸ்ரீகாந்த்.
அனில் கும்ப்ளே
அனில் கும்ப்ளே டெஸ்ட் அணி கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற பின்பே தோனி டெஸ்ட் அணி கேப்டன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மண்ணில் சுழற் பந்துவீச்சு சிறப்பாக எடுபடும். அதிலும், கும்ப்ளே - ஹர்பஜன் சிங் ஒரே அணியில் ஆடினால் அது இந்திய அணிக்கு பெரிய பலம் அதைத் தான் குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீகாந்த்.