சென்னை: ஐபிஎல் தொடரிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வு பெற்றது குறித்து, இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். அஸ்வின் உலகின் மற்ற டி20 லீக் தொடர்களில் விளையாட முடிவு செய்து இருக்கும் நிலையில், அவருக்கு பணம், புகழ் எல்லாம் அதிகம் இருக்கிறது, அப்படி இருக்க ஏன் இந்த முடிவை எடுத்தார் என ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.
அஸ்வினால் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் ஆடியிருக்க முடியும் என்றும், அவரது ஓய்வு முடிவு தனக்கு சற்று ஆச்சரியம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை அன்று, இந்திய கிரிக்கெட்டின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ஸ்ரீகாந்த் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீகாந்த் பேசுகையில், "அஸ்வின் ஏன் ஓய்வு பெற்றார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவரது இடத்தில் இருந்திருந்தால், இன்னும் குறைந்தது இரண்டு வருடங்களாவது ஐபிஎல்-ல் தொடர்ந்து விளையாடியிருப்பேன். நிச்சயமாக, அஸ்வினைப் பொறுத்தவரை பணம், புகழ் அல்லது பெயர் ஒரு பொருட்டல்ல. அவையெல்லாம் அவரிடம் ஏராளமாக உள்ளன. ஆனாலும், அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஐபிஎல்-ல் விளையாடிவிட்டு, அதன் பிறகு மற்ற லீக்குகளுக்குச் சென்றிருக்கலாம்" என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், "ஐபிஎல்-ல் ஒரு வீரருக்குக் கிடைக்கும் அங்கீகாரமும், வெளிச்சமும் மற்ற எந்த லீக்கிலும் கிடைப்பதை விட மிக அதிகம். ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மற்ற வீரர்கள் வெளிநாட்டு லீக்குகளில் விளையாடும் போக்கை அஸ்வின் தொடங்கி வைக்கலாம். ஆனால், ஐபிஎல் கொடுக்கும் புகழுக்கு அருகில் கூட மற்ற லீக்குகள் வரமுடியாது" என்றார்.
அஸ்வினின் வளர்ச்சிக்கு ஐபிஎல் எந்த அளவுக்கு முக்கியக் காரணமாக இருந்தது என்பதையும் ஸ்ரீகாந்த் சுட்டிக்காட்டினார். "இந்தியா உருவாக்கிய சிறந்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களில் அஸ்வினும் ஒருவர். அவருக்குப் புகழே ஐபிஎல் மூலமாகத்தான் வந்தது. அவர் உள்ளூர் போட்டிகளிலும், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே மூலமாகத்தான் அவர் பரவலாக அறியப்பட்டார். குறிப்பாக, கிறிஸ் கெய்லை அவர் தொடர்ந்து ஆட்டமிழக்கச் செய்தது அவரைப் பிரபலமாக்கியது" என்று ஸ்ரீகாந்த் நினைவு கூர்ந்தார்.
ஐபிஎல் தொடரில் அஸ்வின் ஒரு அட்டாக்கிங் பந்துவீச்சாளராகவும், அதே சமயம் ரன்களைக் கட்டுப்படுத்தும் சிக்கனமான பந்துவீச்சாளராகவும் திகழ்ந்தார். கடந்த ஆண்டு நடந்த மெகா ஏலத்திற்குப் பிறகு மூன்று வருட ஒப்பந்தத்தின் பாதியிலேயே அவர் ஓய்வு பெறுவது தமக்கு ஆச்சரியமளிப்பதாக ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரில் 221 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 30.22 என்ற சராசரியுடனும், 7.20 என்ற எக்கானமி ரேட்டுடனும் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், பேட்டிங்கிலும் ஒரு அரைசதம் உட்பட 833 ரன்களை அவர் குவித்துள்ளார்.